தேனி பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடம்: கலெக்டர் வைத்திநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
தேனி, ஜூலை.14-
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் இன்று (14.7.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்து. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம். பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வையொட்டி பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.
இதன்பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை மையம், மருந்தக பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் சிகிச்சை வழங்கப்படும் விவரம் குறித்தும். கோரிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கியதுடன், ஊட்டச்சத்து உணவுகளை முறையாக உட்கொண்டு ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் பதிவேடுகளை பார்வையிட்டு, அதிலுள்ள தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு கர்ப்பிணி பெண்ணிடம், மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ளுமாறும், மருத்துவரின் ஆலோசனைப்படி ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வரதராஜன், நிலைய மருத்துவ அலுவலர் மரு.தண்டபாணி, பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு. செயல் அலுவலர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
...........................
K.நாகராஜ், தலைமை நிருபர்




Comments