தேனியில் முன்னாள் படை வீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம்: நிகழ்ச்சியில் 29 பயனாளிகளுக்கு ரூ.4.45 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்
.
தேனி, ஜூன்.25-
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக கூட்டரங்கில் இன்று (25.6.2026). முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தலைமையேற்று தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கினை துவக்கி வைத்து பேசுகையில், முன்னாள் படைவீரர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுவதன் நோக்கம் முன்னாள் படைவீரர்கள் ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான ஆலோசனைகளை பெறுவதையே ஆகும். அந்த வகையில் இதுபோன்ற கருத்தரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப வாரிசுதாரர்கள் கலந்துகொண்டு சுயதொழில் மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் மற்றம் வங்கிக்கடன் விவரங்கள் குறித்து தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் பயிற்சிபெற்று வங்கிக் கடனுதவி மூலம் சுயதொழில் உருவாக்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் தாங்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கிட முடியும்.
மேலும், மகளிர்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து தொழில் முனைவோராக பயன்பெறுவதற்கு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், இன்று பெறப்பட்ட 35 மனுக்களில் பட்டா மாறுதல், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின்னணு குடும்ப அட்டை வேண்டுதல், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பேசினார்.
இதனைத்தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் வழங்கும் போது அலுவலர்கள் அதற்கு தனிக்கவனம் செலுத்தி தீர்வு வழங்கிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இதன் பின்னர் 10 பயனாளிகளுக்கு ரூ.3,50,000/- கல்வி உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.5,383/- மதிப்பிலான வீட்டுவரிச்சலுகை மீளப்பெறுதலுக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.7,280/- கண் கண்ணாடி மானியமும், 15 பயனாளிகளுக்கு ரூ.82,500/- மதிப்பிலான தையல் இயந்திரங்கள் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.4.45,163/- மதிப்பிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) லெப்ட் கர்னல் தினேஷ், முன்னாள் படைவீரர் நலக்குழு அமைப்பாளர் இளையராஜா, விங் கமாண்டர் (ஓய்வு) கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
............................
நாகராஜ், தலைமை நிருபர்



Comments