Skip to main content

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., கோரிக்கை

தேனி, நவ.3-

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் 3.12.2025 அன்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதில் நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசுகையில், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள், மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 6.11.2025 அன்று அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். 

எனவே அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசினார்.
.................................
நாகராஜ், செய்தி ஆசிரியர் 

Comments