தேனியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 429 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்
தேனி, நவ.8-
தேனி மாவட்டம். கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் 8.11.2025 அன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங்429 பேர்களுக்கு தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில், பிறரை சார்ந்து இல்லாமல் சுயமரியாதையோடு வாழ்வதற்கும். படித்த வேலைக்கு செல்வது அவசியமாகும். தமிழ்நாடு அரசின் சார்பில் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
வேலைத்தேடும் இளைஞர்கள் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதன் மூலம், தனியார் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து கொண்டு தங்கள் திறமைகளை மேம்படுத்தி கொள்ள முடியும். தற்பொழுது வேலைக்கு செல்வதில் போட்டிகள் அதிகம் உள்ளது. கல்வியை முறையாக படித்திருந்தால் எங்கு சென்றும் பணிபுரியலாம். எந்த துறையில் பணிபுரிய வேண்டும் என்ற இலக்கை உறுதி செய்து. அதற்கு நாம் முறையாக பயிற்சி செய்து, தங்களது திறமைகள் மூலம் எந்த துறையானாலும் வெற்றி பெற வேண்டும்.
மேலும், அரசின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு விதமான போட்டித்தேர்வுகளுக்கும் முயற்சி செய்ய வேண்டும். அதிகமான தேர்வுகளை எழுதும் போது தான் நாம் எந்நிலையில் உள்ளோம், இன்னும் எவ்வளவு பயிற்சி தேவை போன்றவற்றை தெரிந்து அதற்கு தகுந்தவாறு முயற்சி செய்ய வேண்டும்.
இம்முகாமில் தனியார்துறைகளில் பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், வேலைவாய்ப்பினை பெற இயலாதவர்கள் மனம் தளராமல், தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக முயற்சி செய்வதன் பல்வேறு அனுபவங்களை பெற்று நமது இலக்கை அடைய முடியும் என கலெக்டர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 429 பேர்களுக்கு தனியார் துறையில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளையும். 98 நபர்களுக்கு திறன் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.
இம்முகாமில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா மற்றும் கல்லூரி தாளாளர் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
..........................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments