Skip to main content

தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள்: மாநில தலைவர் திண்டுக்கல் நடராஜன் வழங்கினார்


தேனி, ஜூன்.22-
தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கம் மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் பொது நல சேவை மையம் சார்பில் கல்வி பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி டி.சி.ஏ மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு தேனி மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சேதுபதி, மாநில பொருளாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்றார். 
விழாவில் மாநில தலைவர், முன்னாள் சேர்மன் திண்டுக்கல் நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு மற்றும் பெண்கள் ஆண்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவின்போது எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படித்து முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற 12 மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசுத்தொகை வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணைத்தலைவர் வக்கீல் முருகன், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், வக்கீல் கருப்பசாமி உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாயத்தினர் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் தேனி மாவட்ட பொருளாளர் செல்லப்பாண்டி நன்றி கூறினார்.
இதனைத்தொடர்ந்து 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்க மாநில தலைவர் நடராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், எங்கள் சங்கத்தின் பிரதான கோரிக்கையாக எம்.பி.சி., சமுதாய பிரிவு வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறோம். தெலுங்கு பட்டி செட்டி சமுதாயத்தினருக்கு மட்டும் தற்போது எம்.பி.சி., சமுதாய பிரிவு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல சாது செட்டியார்கள், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாயத்தினருக்கும் எம்.பி.சி., சமுதாய பிரிவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைக்கிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் சங்கத்தின் சார்பில் பேரணி, மாநில மாநாடு போன்றவைகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய கட்சிகளுக்கு வருகின்ற தேர்தலில் ஆதரவு அளிப்போம். இதற்கு எந்த கட்சியும் முன் வரவில்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்த 30 லட்சம் மக்கள் தேர்தலை புறக்கணிக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
..........................
முத்துராஜ், சிறப்பு நிருபர் 



Comments