தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலை மற்றும் தனியார் நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
தேனி, மே.5-
தேனி மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை, ஊஞ்சாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலை. ஆண்டிபட்டி உயர் தொழில்நுட்ப விசைத்தறி நெசவு பூங்கா ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், துணிநூல் இயக்குநர் இரா.லலிதா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் 5.5.2025 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நவீன இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்யப்படும் நூல் அளவு குறித்தும் அரசு திட்டங்களுக்கான வேட்டி சேலை மற்றும் பள்ளி சீருடை ஆகிய திட்டங்களுக்கு தேவையான நூல்கள் உற்பத்தி குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், இந்த நூற்பாலையில் தொழிலாளர் நலன் காக்கும் பொருட்டு சிற்றுண்டி சாலை, இலவச சீருடை தொழிலாளர் குழந்தைகள் கல்வி உதவித்தொகை, தொழிலாளர் ஓய்வு அறை தொழிலாளர் குழந்தைகள் பேணகம் இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம், தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கருணை அடிப்படையில் பணி நியமனம் உள்ளிட்ட செயல்பாடுகள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என தொழிலாளர்களிடம் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து ஊஞ்சாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் நூற்பாலையில், தற்போது நவீன மயமாக்கப்பட்ட AIRJET நூற்பு இயந்திரம் நிறுவப்பட்டு அதிக திறனுடன் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதையும். இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் நூல்களையும், குழந்தைகளுக்கான வெப்ப போர்வைகள் பாலி காட்டன் உள்ளிட்ட துணிரகங்களின் தரம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வைகை உயர்தொழில்நுட்ப விசைத்தறி நெசவு பூங்காவுடன் இணைத்து பணிகள் மேற்கொள்வது குறித்து தனியார் நூற்பாலை அலுவலர்களுடன் விரிவாக கலந்துரையாடினார்.
இதனை அடுத்து வைகை உயர் தொழில்நுட்ப விசைத்தறி நெசவு பூங்காவில் உள்ள தொழிற் கூடங்களில் விசைத்தறிகள் நிறுவப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொழிற்கூடங்களில் விசைத்தறிகள் நிறுவவும். தொழிற்கூடங்களுக்கு உயர் அழுத்தமின் இணைப்பு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
................................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments