தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாம்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தேனி, மே.3-
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு 3.4.2025 அன்று தேனி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவபிரசாத் முன்னிலையில் வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி வாகனத்தில் அவசர கால வழி (Emergency Exit Doors) முதலுதவிப்பெட்டி, ஏறி இறங்கும் படிகட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை (Plot form) கண்காணிப்பு கேமிரா உள்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகியன முறையாக உள்ளதா என்றும், மேலும் வேக கட்டுப்பட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் பள்ளி வாகன டிரைவர்களிடம் தெரிவிக்கையில், ஆண்டுக்கு ஒருமுறை பன்ளி மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வாகனங்களை கூட்டாய்வு மூலம் ஆய்வு செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளி வாகன ஓட்டுநர்கள் சீருடை அணிந்திருக்க வேண்டும். பள்ளிவாகணத்தில் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைப்பேசி எண் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் தொலைப்பேசி எண், காவல் நிலைய தொலைப்பேசி எண், குழந்தைகள் பாதுகாப்பு எண் உள்ளிட்டவை நன்றாக தெரியும் வகையில் எழுதப்பட வேண்டும். வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட ஒரு வாகனத்தின் திறன் எவ்வாறு முழுமையாக உள்ளதோ அதேபோன்று வாகன ஓட்டுநர்களும் முழுமையான உடல் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண் பரிசோதனை மேற்கொண்டு மருத்துவரின் அறிவுரையை பின்பற்றி முறையாக மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முறையாக மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு உடலை பேணி பாதுகாத்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் மருத்துவ காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசு விதித்துள்ள வழிமுறைகளையும் சாலை பாதுகாப்பு விதிகளையும் முறையாக பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும். பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதால் வாகனங்கள் இயக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று ஆய்வுக்கு வராத வாகனங்களை பள்ளி திறப்பதற்கு முன்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தார்.
3.5.2025 அன்று நடைபெற்ற தேனி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களில் 380 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
இந்த ஆய்வின் போது பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத் பீடன், உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்பிரமணிய பாலசந்ரா, வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ், மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, மோட்டார் ஆய்வாளர்கள் மணிவண்ணன் (தேனி), சுந்தரராமன் (உத்தமபாளையம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று உத்தமபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் 287 வாகனங்கள் வருகின்ற 6.5.2025 அன்று கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாம் பணிகள் நடைபெற உள்ளது. இந்த பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு முகாமின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் மொத்தம் 667 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments