Skip to main content

தேனி அருகே 2 சமுதாயங்களுக்கு சொந்தமான கோவிலை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, மே.28-

இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் கட்சியினர் மற்றும் 2 சமுதாய பொதுமக்கள் 27.5.2025 அன்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில்,

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாயுடு சமுதாய பொதுமக்கள், மற்றும் வாணிய செட்டியார் சமுதாய பொதுமக்கள் இணைந்து கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய காளியம்மன் கோவிலை, 2 சமுதாய மக்களும் இணைந்து கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வந்த நிலையில், ஆண்டுதோறும் பொதுமக்களிடம் வரி வசூல் செய்து திருவிழா நடத்தியதுடன், கோவிலையும் பராமரிப்பு செய்து வருகின்றனர். 
இந்த கோவிலுக்கு சொந்தமாக அன்னஞ்சி விலக்கு பகுதியிலும், ஊஞ்சாம்பட்டியிலும் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னையில் பல ஆண்டுகளாக இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் திடீரென தேனிக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் இந்த கோவில் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த கோவிலுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். மேலும் கிராம மக்களின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அந்த நபர் கோவிலின் புனிதத்தையும், ஆகம தர்மத்தையும் கெடுக்கும் விதத்தில் திடீரென ஆடு, கோழிகளை கோவிலுக்குள் பலி கொடுத்து கோவிலின் புனிதத்தை கெடுத்துள்ளார். மேலும் கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கில் போலி ஆவணங்கள் தயார் செய்து வருவதாகவும் நாங்கள் அறிகிறோம்.

இதுகுறித்து அவரிடம் பொதுமக்கள் கேட்டபோது கிராம மக்களை ஆபாசமாக திட்டிய அவர், நான் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் உதவியாளராக இருந்தவன். என்னை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து அதிகாரிகளும் நான் சொல்வதை மட்டும் தான் கேட்பார்கள் என்று கூறுகிறார். மேலும் தற்போது கோவிலை அத்துமீறி பூட்டி வைத்து, பொதுமக்கள் வழிபாடு செய்யாமல் தடுத்து விட்டார். இதனால் பொதுமக்கள் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
எனவே கோவிலை அபகரிக்க முயலும் கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுபோல உடனடியாக பூட்டி வைக்கப்பட்டுள்ள கோவிலை திறந்து பொதுமக்களின் வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். மேலும் கிருஷ்ணமூர்த்தியிடம் உரிய விசாரணை செய்து அவர் போலி ஆவணங்கள் தயார் செய்தது உண்மை என்று தெரிய வந்தால் அவர் மீது நில அபகரிப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வதுடன், வன்முறையை தூண்டும் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோன்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது.
.............................
நாகராஜ், தலைமை நிருபர் 







Comments