Skip to main content

கடமலைக்குண்டு அருகே அரசரடி கிராமத்திற்கு மின்சாரம், அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, மே.17-

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம், வெள்ளிமலை அருகே உள்ள அரசரடி கிராம பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், அரசரடி கிராம பகுதியில் நாங்கள் கடந்த 1953-ம் ஆண்டு முதல் 400 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

இந்த 400 குடும்பங்களுக்கும் தனித்தனியாக ரேசன் காடுகள் உள்ளது. எங்கள் கிராமத்திற்கு கடந்த 1969-ம் ஆண்டில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை எங்கள் ஊரில் உள்ள எந்த வீட்டிற்கும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அது மட்டும் இன்றி எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள் வாழ்ந்து வருகிறோம்.

அதுபோல போக்குவரத்திற்காக சீரான தார்ச்சாலை இல்லாமல் குண்டும் குழியுமாக சாலை உள்ளது. இந்த தார் சாலை போட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. அதை சரி செய்யாத காரணத்தால் அவசர காலத்திற்கு எங்களால் விரைவாக இன்னும் செல்ல முடியாமல் உள்ளோம் மேலும் உடல் நலம் சரியில்லாதவர்களை டோலி மூலம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அடிக்கடி உயிர் சேதம் ஏற்படுகிறது.

மேலும் மழைக்காலங்களில் எங்களது வீட்டின் சுவர் இடிந்து விட்டாலோ, காற்று அடித்து வீட்டின் மேற் கூரை சேதம் அடைந்து விட்டாலோ நாங்கள் சரி செய்ய முயலும் போது வனத்துறை அதிகாரிகள் எங்களை சரி செய்யக்கூடாது என்று சத்தம் போடுகிறார்கள். அதனை மீறி நாங்கள் சரி செய்ய முயன்றால் அவர்கள் எங்கள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலோடும், மனவேதனையிலும் வாழ்ந்து வருகிறோம். 

அதுபோல எங்களது ஊரில் இருந்த சத்துணவு மையம், அங்கன்வாடி மையம் ஆகியவை சேதமடைந்த நிலையில் பூட்டியே உள்ளதால் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கு அடிக்கடி நோய் தொற்றும் ஏற்படுகிறது.

எனவே எங்கள் மீது கருணை கூர்ந்து எங்கள் கிராமத்திற்கு குடிநீர், மின்சாரம், தார் சாலை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து எங்களுக்கும், எங்கள் ஊர் மக்களுக்கும் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

...........................

நாகராஜ், தலைமை நிருபர் 




Comments