வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் : கலெக்டர் பாரம்பரிய உடையில் பங்கேற்று தொடங்கி வைத்தார்
தேனி, மே.10-
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி வருகின்ற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 9.5.2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மன் கோஷத்துடன் தேர் வடத்தை பிடித்து இழுத்து தேர் நிலையில் இருந்து கோவில் வாசல் முன்பு நிறுத்தினர். இதன் பின்னர் இந்த தேர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையில் நிறுத்தப்பட்டு கோவில் பகுதியை சுற்றி வருகின்ற 12-ந் தேதி (திங்கட்கிழமை) தேர் நிலையை வந்தடையும்.
இந்த தேரோட்ட நிகழ்வில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, தேனி உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, செயல் அலுவலர் கணேசன், கோவில் செயல் அலுவலர் நாராயணி, ஆய்வாளர் கார்த்திகேயன், ரியல் எஸ்டேட் வயல் பட்டி மணிகண்டன், இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் ராமராஜ், வீரபாண்டி பேரூர் தி.மு.க செயலாளர் செல்வராஜ் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து திருவிழா பகுதியில் தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் நாடுபோற்றும் நான்காண்டு திட்டங்கள். சாதனைகள் குறித்து பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார். அப்போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி உள்பட பலர் உடன் இருந்தனர்.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments