தேனி, ஏப்.28-
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு லோக் ஜனசக்தி கட்சி களப்போராளி அய்யணன், இந்து திராவிட மக்கள் கட்சி மதுரை மண்டல தலைவர் அபினேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டு மனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது உத்தமபாளையம், கோம்பை, போடி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் குடியிருப்போர் மற்றும் வீடு இல்லாதோருக்காக கலைஞர் ஆட்சி காலத்தில் அரசால் வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் தற்பொழுது ஆக்கிரமிப்புகார்கள் பிடியில் சிக்கி உள்ளது. அதனை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகார்கள் பிடியில் உள்ள அரசால் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் கலைஞரால் வழங்கப்பட்ட இலவச காலிமனை பட்டாக்களை தங்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை காலியிடம் பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் ஏற்கெனவே கடந்த 17.2.2025 அன்று மனு கொடுத்திருந்தோம் இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய பொதுமக்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் போதிய அளவில் இல்லை.
எனவே தாங்கள் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும் மற்றும் எங்கள் பகுதியில் சாலை ஓரங்களில் பல்வேறு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் சாக்கடை கழிவு நீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிட துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
.............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments