Skip to main content

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவிலுக்கும், அல்லிநகரம் கிராம கமிட்டிக்கும், எந்தவித சம்பந்தமும் இல்லை. சித்திரை திருவிழாவை இந்து சமய அறநிலையத்துறையே ஏற்று நடத்தும்: திருவிழா ஏற்பாடு ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தேனி, மார்ச்.5-

தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில் அமைந்துள்ளது.  இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ம் தேதி காவடி (சித்திரை) திருவிழா நடைபெற்று வருகிறது. 
இந்த கோவில் திருவிழாவின் போது சாமி அலங்கார ஊர்வலம், மேளதாளம், வான வேடிக்கை போன்ற செலவினங்களை அல்லிநகரம் கிராம கமிட்டி முன் நின்று நடத்தி வந்தது. இந்நிலையில் அல்லிநகரம் கிராம கமிட்டி திருவிழாவை எடுத்து நடத்தக்கூடாது என்று கிராம மக்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த காரணத்தினால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவிழா நடத்துவது குறித்து பொதுமக்கள், திருவிழா உபயதாரர்கள், பக்தர்கள் ஆகியோர்களுக்கான ஆலோசனை கூட்டம் 5.3.2025 அன்று மலைக்கோவில் வளாக பகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் சுந்தரி, ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அல்லிநகரம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

கூட்டத்தின் போது இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பேசுகையில், கடந்த 1973-ம் ஆண்டு முதல் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இந்நிலையில் திருவிழாவை அல்லிநகரம் கிராம கமிட்டியினர் முன் நின்று நடத்தி வந்திருந்தாலும், தற்போது அந்த அமைப்பினர் திருவிழா நடத்துவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், இந்து சமய அறநிலையத்துறை முன் நின்று உபயதாரர்கள் மூலம் திருவிழாவை நடத்த முடிவு செய்தது. இதற்கு யார் வேண்டுமானாலும் உபயதாரர்களாக வரலாம். அவர்களிடம் இருந்து நிதிகள் பெற்றுக்கொள்ளப்படும். ஆனால் வீரப்ப அய்யனார் கோவில் பெயரை சொல்லி யாரும் ரசீது போட்டு நிதி வசூல் செய்யக்கூடாது என தெரிவித்தனர். 
இதனைத்தொடர்ந்து அல்லிநகரம் கிராம கமிட்டிக்கு ஆதரவாக சிலர் பேசுகையில், பல ஆண்டுகளாக கிராம கமிட்டி முன் நின்று செலவு செய்து திருவிழாவை நடத்தி வருகிறது. கோவில் வளாக பகுதியில் சமுதாயக்கூடம் கட்டி உள்ளது. இந்நிலையில் திடீர் என்று பாரம்பரியத்தை தற்போது மாற்றப்படுவது போல் தெரிகிறது என்றனர்.

இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பதில் கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் வீரப்ப அய்யனார் கோவில் தொடர்பாக அல்லிநகரம் கிராம கமிட்டிக்கு ஏதாவது அங்கீகார கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதா? இல்லை. தேவையில்லாமல் பழைய கதைகளை கூட்டத்தில் பேச கூடாது என்றனர்.


இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழா நடத்துவதற்கு இந்த கூட்டத்தின் மூலம் நிதி உபயதாரர்கள் விருப்பமிருந்தால் தங்களது பெயர்கள் கொடுக்கலாம் என தெரிவித்தனர். இதனை அடுத்து ஆலோசனை கூட்டத்தின் போது 28 பேர்கள் திருவிழாவிற்கு நன்கொடையாக உபயமாக நிதி தருகிறோம் என தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.
இதன் பின்னர் கூட்ட முடிவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி கூறுகையில், வீரப்ப அய்யனார் மலைக்கோவில் சித்திரை திருவிழாவை இந்து சமய அறநிலைத்துறையே ஏற்று உபயதாரர்கள் நிதி மூலம் திருவிழா நடைபெறும். அல்லிநகரம் கிராம கமிட்டி மூலம் திருவிழா நடக்காது என்று கூறினார். 

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் வீரப்ப அய்யனார் மலை கோவிலுக்கும், அல்லிநகரம் கிராம கமிட்டிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

நாகராஜ், செய்தி ஆசிரியர் 

.........................

Comments

CARX said…
Good decision 👌
Anonymous said…
அருமையான தீர்ப்பு கிராம கமிட்டியை

ஒதுக்கியது அருமை