Skip to main content

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை; தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறைந்து விடும்: தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

தேனி, மார்ச்.31-

தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., 30.3.2025 அன்று தேனியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையிலான பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என்பதில் தமிழகத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை கூடும். ஆனால் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறையும். அதனால் தான் தி.மு.க வாதம் செய்து வருகிறது. இந்த மறுவரையறை விவகாரத்தில் பிரதமரோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பாராளுமன்றத்தில் பதில் கூற வேண்டியது தானே. ஏன் பேசவில்லை. ஜனநாயக முறைப்படி தான் நடக்கும் என கூறலாமே.

தென் மாநில கூட்டு நடவடிக்கை குழுவில் தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் தற்போதைய மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்கு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலே மறுவரையறை செய்யலாம். அன்றைய காலகட்டத்தில் வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் மக்கள் தொகை விகிதாச்சாரம் ஒரே அளவில் இருந்தது. தற்போது தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி வருகிறோம்.

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளில் கூட அங்கு பிரதமரை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அந்த மாநிலத்தில் 2 எம்.பி.-க்கள் மட்டும் தான். அதனால் பா.ஜ.க அரசால் கைவிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டது. எம்.பி.-க்கள் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால் அந்த மாநிலத்திற்காக பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட எம்.பி.-க்கள் குரல் கொடுப்பார்கள். 
தமிழ்நாட்டிற்காக 40 எம்.பி.-க்கள் குரல் கொடுத்து வருகிறோம். 25 ஆண்டுகள் கழித்து தொகுதி மறுவரையறை செய்யலாம் என்று தி.மு.க உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்து வருவதற்கு காரணம் என்னவென்றால் அது வரையில் இந்த மறுவரையறை பிரச்சனை இல்லாமல் நிம்மதியாக இருப்போம் என்பதற்காக தான்.

இதற்கிடையே நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், தமிழ்நாட்டு முதல்-அமைச்சர் ஸ்டாலின், மன்னராட்சி முதல்வர் என்றும் 2026-ல் தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறியுள்ளார் என்றதற்கு, கடந்த 4 ஆண்டுகளில் தேர்தல் வாக்கு உறுதிகளை முடிந்த அளவு நிறைவேற்றி மக்களுக்காக உறங்காமல் உழைத்து கொண்டு நல்ல முதல்வர் என பெயர் ஸ்டாலின் பெற்றுள்ளார். 
அதனால் வருகின்ற 2026-ல் தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடித்து ஸ்டாலின் தான் முதல்-அமைச்சர் ஆவார். எப்படி என்றால் தி.மு.க-விற்கு 35% வாக்கு வங்கி உள்ளது. மற்ற கட்சியினருக்கு 25 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. மீதமுள்ள 40% மக்கள் நடுநிலையாக வெற்றி பெறக்கூடிய கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பவர்கள். அதனால் அந்த நடுநிலையாளர்களும் தி.மு.க-வை தான் ஆதரளிப்பாளர்கள். 

தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரியினங்கள் மூலம் மத்திய அரசு ரூ.100 எடுத்துச் சென்றால் அதில் ரூ.29  தான் மாநில அரசுக்கு திருப்பி தருகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் ரூ.100-க்கு ரூ.425 திருப்பித் தருகிறது. இதில் பீகார் மாநிலத்திற்கு ரூ.100-க்கு ரூ.922 மத்திய அரசு திருப்பி தருகிறது. 
அதுபோல தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 6 மாதமாக சுமார் ரூ.4,000 கோடியை மத்திய அரசு நிலுவையில் நிறுத்தி வைத்துள்ளது. 
தமிழகத்திற்கு அளிக்கப்படும் அநீதிகளை கண்டித்து 40 எம்.பி.-க்களும் ஒரு நாள் பாராளுமன்றத்தையே முடக்கி போராட்டம் நடத்தினோம். ஆனால் நாங்கள் பாராளுமன்றத்தில் போராடப்படும், எழுப்பப்படும் கேள்விகள் மறைக்கப்படுகிறது. மத்திய பா.ஜ.க அரசசை கண்டித்து தி.மு.க போராடுவது குறித்து பாமர மக்கள் கூட தற்போது புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்விற்கு தடை என்று முதல் கையெழுத்து போடப்படும் என்ற கேள்விக்கு, நீட் தேர்வு தடை குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளோம். பதில் இல்லை. விருப்பமுள்ள மாநிலங்களுக்கு மட்டும் நீட் தேர்வு வைத்து கொள்ளவும் மற்ற மாநிலங்களுக்கு வேறு தேர்வு முறைகள் மூலம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்து மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையை தொடங்குவதற்கான வழிமுறை ஏற்படுத்திக் கொள்ளலாம். 
அதுபோல ஓட்டுக்கு பணம் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று எழுப்பிய கேள்விக்கு 100 சதவீதம் ஓட்டுக்கு பணம் பெரும் மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தி.மு.க வரவேற்கிறது.

த.வெ.க இத்தார் நோன்பில் பங்கேற்பது, கேக் வெட்டி கொண்டாடுவது போன்றவற்றினால் சிறுபான்மையினர் ஓட்டை பிரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறதா என்ற கேள்விக்கு, ஒரு கட்சி, ஒரு இயக்கத்தை நடத்துவது என்பது மிகவும் சிரமம். ஆனால் சிலர் காலிகுடங்களுடன் நடந்து செல்கிறார்கள். ஆனால் தி.மு.க-வின் தலைவரோ எண்ணெய் நிறைய உள்ள குடத்தினை சுமந்து கொண்டு சிந்தாமல், சிதறாமல் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். 
அதுபோல வைகை அணையை தூர்வாருவதற்கு சுமார் ரூ.450 கோடி வரை செலவாகும் என்பதால் அணை நீர் பிடிப்பு பகுதியில் புதிய அணையை ரூ.500 கோடியில் அமைப்பதற்கான புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 
இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., கூறினார்.

..................................

Comments