தேனி, மார்ச்.29-
தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15 -வது கல்லூரி ஆண்டு விழா 28.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார்.
விழாவில் மதுரை அண்ணா பல்கலைகழக மண்டலம் டீன் டாக்டர்.லிங்கதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கல்வி ஒன்று மட்டுமே சமுதாய வாழ்க்கை முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், தனிமனித ஒழுக்கம் மற்றும் ஆளுமை திறனை அளிக்கும் என்றும், மாணவர்கள் படிக்கும் பொழுதே தங்களுடைய அறிவை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியுமென்றும், அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு வழங்குகின்ற உதவித் தொகையினை சரியாக பயன்படுத்தி உயர்ந்த கல்வி தரத்தை பெற வேண்டும்.
மேலும் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும். மாணவிகள் தங்களுடைய கல்லூரி படிப்பினை முடித்தவுடன் பணிகளுக்கு சென்று தங்களுடைய குடும்ப நிதி நிலையை தன்னிறைவு பெற செய்ய வேண்டும். கல்லூரியில் படிக்கும் பொழுது மாணவ, மாணவிகள் நேர்மறை எண்ணங்களை வளர்த்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அனுபவங்களின் மூலம் உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்று பேசினார்.
விழாவில் 2024-2025-ம் கல்வியாண்டின் சிறந்த மாணவ/மாணவிகளாக கட்டிடவியல் துறை மாணவி ஸ்வேதா, கணிப்பொறி மற்றும் அறிவியல் துறை மாணவன் முகிலன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவி விஷ்னுபிரியா, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறை மாணவி ரிந்தியா இயந்திரவியல் துறை மாணவன் ஸ்ரீராம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சி மன்றம் மற்றும் கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர். விழாவின் போது அனைத்து துறை மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன், ஆண்டு விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் வெனிஸ்குமார், ஆதிலிங்கம் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் நன்றி கூறினார்.
நாகராஜ், தலைமை நிருபர்
.......................
Comments