தேனி மாவட்டத்தில் கிரசர்களில் உற்பத்தி செய்யப்படும் 70% கனிமங்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் முறைகேடாக கேரளாவிற்கு கடத்தி செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு : டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் குற்றச்சாட்டு
தேனி, மார்ச்.24-
தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களிடம் தமிழ்நாடு மண் லாரி உரிமையாளர்கள் பெடரேசன் தலைவர் செல்ல. ராஜாமணி தலைமையில் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி, உத்தமபாளையம் தாலுகா டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முனியாண்டி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரி, கிரசர்களில் இருந்து செயற்கை மணல் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகிய கனிமங்களை எடுத்து செல்லும் லாரிகளுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு ட்ரான்சிட் பாஸ் கொடுக்க மறுக்கும் கிரசர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல அனுமதி பெறாமல் முறைகேடாக நடைபெற்று வரும் கல்குவாரி, கிரசர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடந்த 5.3.2025 முதல் தேனி மாவட்டத்தில் இயங்குகின்ற கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக சிண்டிகேட் அமைத்துக் கொண்டு லாரி தொழிலையும், கட்டுமான தொழிலையும், முடக்குகின்ற வகையில் கல்குவாரி கிரசர்களில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்களுக்கு யூனிட்டுக்கு தலா ரூ.1000 விலை உயர்த்தி ஜல்லி ஒரு யூனிட் ரூ.4 ஆயிரத்திற்கும் எம் சாண்ட் ஒரு யூனிட் ரூ.5000-க்கும், பி.சாண்ட் ஒரு யூனிட் ரூ.6000-க்கும் விற்பனை செய்வதால் லாரி உரிமையாளர்கள் பெருத்த சிரமத்தை சந்தித்து வருகிறோம்.
மேலும் ஏழை எளிய வீடு மற்றும் கட்டிடம் கட்டும் மக்கள், அரசின் மூலம் செயல்படுத்தி வரும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் மூலம் கட்டப்படும் வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் விலை ஏற்றத்தை திரும்ப பெற்று பழைய விலைக்கே எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல தேனி மாவட்டத்தில் உள்ள கிரசர்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் 70% கனிமங்களை தினசரி 100-க்கான கனரக 12 வீலர் 14 வீலர் மற்றும் 16 வீலர் லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகபாரம் எடுத்துக்கொண்டு போடி மெட்டு, குமுளி, கம்பம் மெட்டு சாலை வழியாக கேரளாவிற்கு கடத்திச் சென்று அரசுக்கு தினசரி கோடிக்கணக்கான ரூபாய் வரி இழப்பை ஏற்படுத்தி வருவதை தடுத்து கேரளாவுக்கு கனிமங்களை எடுத்துச் செல்வதை தடை செய்து மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு மட்டுமே கனிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே எங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் தேனி மாவட்டம் முழுவதும் கனிமங்களை எடுத்துச் செல்ல இயக்கப்பட்டு வரும் அனைத்து டிப்பர் லாரிகளையும் இயக்காமல் நிறுத்தி வைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நாகராஜ், தலைமை நிருபர்
...........................
Comments