திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி: தேனியில் இருந்து திண்டுக்கல் வரை போராட்ட குழுவினர் மார்ச் 23-ல் நடைபயணம்
தேனி, மார்ச்.22-
திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழு ஆலோசனை கூட்டம் தேனியில் 21.3.2025 அன்று நடைபெற்றது. கூட்ட முடிவில் போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேனி மாவட்ட மக்களின் 60 ஆண்டுகள் கோரிக்கையான திண்டுக்கல் முதல் குமுளி (லோயர் கேம்ப்) வரை அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்களும், பல்வேறு போராட்டங்கள், பேரணிகளும் நடத்தி உள்ளோம்.
திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் வரை இருந்த திட்டம் 2016-ம் ஆண்டு திண்டுக்கல் முதல் சபரிமலை வரை என மாற்றப்பட்டது. இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இந்த திட்டம் செயல்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தினை திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் மற்றும் லோயர் கேம்ப் முதல் சபரிமலை என 2 திட்டமாக பிரித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அப்போது தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் நடைபயணமாக சென்று நாளை மறுநாள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க உள்ளோம்.
இந்த நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் மற்றும் தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
இவ்வாறு போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் கூறினார். அப்போது போராட்ட குழுவில் உள்ள 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் மனோகரன், தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்க செயலாளர்கள் மெல்வின், அந்தோணி பிரான்சிஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
நாகராஜ், தலைமை நிருபர்
............................
Comments