தேனி, மார்ச்.19-
தேனி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக பேரம் பேசி வரி வசூல் செய்தும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரையும் அவருக்கு துணை போகும் ஊழியர்களையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு 19.3.2025 அன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் நகர்மன்ற தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தேனி வட்டார தலைவர் முருகன், மாவட்ட செயலாளர்கள் அபுதாகிர், சம்சுதீன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது நகராட்சியில் சரிவர குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து போராட்டத்தின் போது குப்பைகளை கொட்டியும்,நகராட்சி ஆணையாளர் மற்றும் அவருக்கு துணை போகும் ஊழியர்களை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர் அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, நகராட்சி பகுதியில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நகராட்சி பகுதியில் கொசுக்கள் அதிகமாக உள்ளதுடன் தெரு நாய்கள் அதிகமாக உள்ளதால், தெருக்களில் உள்ள குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படுகிறது.
இதனால் குழந்தைகள் முதியவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நகராட்சி பகுதி மக்களிடம் வரி வசூல் செய்வதில் அதிக கவனம் செலுத்தும் நகராட்சி நிர்வாகமே, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நாகராஜ், தலைமை நிருபர்
...........................
Comments