தேனி பழைய பஸ் நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழி குறித்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு
தேனி, பிப்.8-
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையத்தில் உள்ள ஹோட்டல்கள், டீக்கடை பேக்கரி உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் காலாவதியான பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழி குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 7.2.2025 திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி பழைய பேருந்து முனையத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட கலெக்டர் பேருந்து முனையத்திற்குள் அமைந்துள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து அதற்கு FSSAI சான்று உள்ளதா என்பதை உறுதி செய்தார்.
இதனைத்தொடர்ந்து பழைய பேருந்து முனையம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் மொத்தம் 15 கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் சுமார் 213 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு ரூ.15 ஆயிரம் உணவு பாதுகாப்பு துறை மூலம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 112 கிலோ அளவிலான நெகிழி பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதுபோல பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து அழிக்க கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது தேனி அல்லிநகரம் நகராட்சியின் நகர் நல அலுவலர் கவிப்ரியா, உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன், நகராட்சி சுகாதார அலுவலர் ஜெயராமன், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார், நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
.....................
Comments