தேனி, பிப்.28-
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஸ்ரீ அங்காளஈஸ்வரி மற்றும்ஸ்ரீ முத்துக்கருப்பண சுவாமி கோவிலில் சிவராத்திரி விழா 2 நாட்களாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள் குழு சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.
ஸ்ரீ முத்துக்கருப்பண சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பிப்.26 புதன்கிழமை அன்று ஆலய வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ வீரபத்திரருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பல்லயம் படையல் வைத்து வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குலதெய்வம் வழிபாட்டு குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பிப்.27 வியாழக்கிழமை அன்று 7 மணிக்கு சிவனடியார்கள் கலந்து கொண்ட பாரம்பரிய சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இரவு 12 மணிக்கு ஸ்ரீ அங்காளஈஸ்வரி கோவிலில் அம்மனுக்கும் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கும் பல்லயம் பூஜை நடைபெற்றது.
இதில் ஸ்ரீ அங்காளம்மன்,ஸ்ரீ வீரபத்திர சுவாமி, ஸ்ரீ பாலகுருநாதர் உள்ளிட்ட 21 தெய்வங்களும். பெட்டியுடனும், மேளதாளங்களுடனும் திருவீதி உலா ஊர்வலம் நடைபெற்றது. இதன் பின்னர் ஸ்ரீ அங்காளஈஸ்வரி அம்மன் ஊஞ்சல் உற்சவம் தாலாட்டு பாடலுடன் விழா நிறைவடைந்தது.
இதனை அடுத்து மூன்றாம் நாளான பிப் 28 அன்று ஸ்ரீ அங்காளஈஸ்வரி கோவில் மற்றும் ஸ்ரீ முத்துக்கருப்பணசுவாமி கோவிலில் மறு பூஜைகள் நடைபெற்றன. கோவில் பூஜைகளை பூசாரி சேகர் தலைமையிலான பூசாரிகள் செய்திருந்தனர்.
பழனிவேல் ராஜன், சிறப்பு நிருபர்
...........................
Comments