Skip to main content

தேனியில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் கலந்துரையாடல் கூட்டம்: ஆணைய தலைவர் சொ.ஜோ அருண் தலைமையில் நடந்தது

 


தேனி, பிப்.25- 
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (25.02.2025) சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த  கலந்துரையாடல் கூட்டம் மாநில சிறுபான்மையினர்  ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் தலைமையில், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வா.சம்பத், தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் மற்றும் மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர்கள்  நாகூர் எ.எச்.நஜ்முதீன், பிரவீன்குமார் டாடியார், ராஜேந்திர பிரசாத், எம்.ரமீட்கபூர், ஜெ.முகமது ரபி, எஸ்.வசந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் மக்களுக்கு தேவையான திட்டங்களையும்,  அவர்களின்  உரிமைகள் மற்றும் வாழ்வியல் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. 

தமிழ்மொழி அல்லாமல் பிற மொழியை  தாய்மொழியாக கொண்டு தமிழ்நாட்டில் வாழும்  சிறுபான்மையினர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும், திட்டங்களும் அரசியலமைப்பு திட்டத்தின்படி, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செய்து தரப்படுகிறது.  

தமிழ்நாடு சிறுபான்மையினர்கள் சட்டம் 2010-ன் படி தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் உருவாக்கப்பட்டது. கொள்கை அளவில் முடிவு எடுப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வது இந்த ஆணையத்தின் முக்கிய பணியாகும்.  

இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 10 மாவட்டங்களில் இருந்து சிறுபான்மையினரிடமிருந்து பெறப்பட்ட 489 கோரிக்கை மனுக்களில் 302 மனுக்களுக்கு  தீர்வு காணப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சிறுபான்மையினர் அங்கீகாரம்  கிடைக்காமல் இருந்த 159 கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நடவடிக்கையால் நிரந்தர சிறுபான்மையினர் அங்கீகாரம்  கிடைத்துள்ளது.  

மேலும், சிறுபான்மையினர் அங்கீகாரம் கோரும் கல்வி நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 
தேனி மாவட்டத்தில் 2 முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் 2 கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் ஆதரவற்றவர்களுக்கான உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, கைவினை பொருட்கள் செய்வதற்கு பயிற்சி, சிறுதொழில் தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.                                                  
TN State Minorities Commission என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் பக்கங்கள் வாயிலாக  சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். 

மேலும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் புத்தகம் ஒன்றை வெளிடப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை, தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் விவரம், மின்னஞ்சல், தொலைப்பேசி விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. QR code வாயிலாக ஸ்கேன் செய்து இப்புத்தகத்தின் PDF வடிவத்தினை பெற்றுக்கொள்ளலாம். 
சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் மகளிர் உதவும் சங்கம் மூலமாக 2022 -2025 வரை ரூ.40 இலட்சம் இணை மானியம் வழங்கப்பட்டுள்ளது.  

தேனி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட சிறுதொழில் உதவுதலுக்கு 600 பயனாளிகளுக்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்திற்கும் ரூ.43 இலட்சத்திற்கும் மேல் இணை மானியம் வழங்கப்பட்டுள்ளது.    

தேனி மாவட்டத்தில் இதுவரை 978 கிராமப்புற சிறுபான்மையினர் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக  7 இலட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டுள்ளது. உலமாக்கள் பணியாளர் வாரியத்தின் சார்பில் 18 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண, மகப்பேறு முதியோர் உதவித்தொகை, விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமசடங்கு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி உதவித்தொகை  போன்றவற்றின் கீழ் தேனி மாவட்டத்தில்  358 பேர்கள் பயன் பெற்றுள்ளனர். இதுமட்டுமன்றி பிற உதவித்தொகைகளோடு சேர்த்து ரூ.43 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளது. உலமாக்கள் பணியாளர் வாரியம் போன்றே கிறித்துவ பணியாளர் வாரியத்தின் சார்பிலும் அனைத்து உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. பதிவு பெற்ற வகுப்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

கிறித்துவர்களின் கல்லறை தோட்டம் மற்றும் முஸ்லீம்களின் கபர்ஸ்தான் ஆகிவற்றிற்கு சுற்றுச்சுவர் மற்றும் பாதை அமைப்பதற்கு,  நிதி ஒதுக்கீடு கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது
சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களையும், உதவித்தொகைகளையும் சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் சுயதொழில் தொடங்க தலா ரூ.15,000/- வீதம் 25 முஸ்லீம் மகளிர்களுக்கு ரூ.3,75,000/-க்கான காசோலைகளையும், கிறித்துவ உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் என 7 நபர்களுக்கு நல வாரிய அட்டையினை  மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் வழங்கினார். 

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்       ஆர்.சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் ஐ.மகாலெட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப்,                          உதவி காவல் கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத்பிடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலர் வெங்கடாச்சலம், இஸ்லாமிய ஜமாத் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், கிறித்துவ பேராலயங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகராஜ், செய்தி ஆசிரியர் 


........................

Comments