வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் பணியாளர்களுக்கு ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டிடம்: தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்
தேனி, பிப்.18-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து 17.2.2025 அன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் குடியிருப்புக் கட்டிடம் கட்டுவதற்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை துவக்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துறையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், திருக்கோயில்களில் குடமுழுக்கு திருத்தேர்களை பழுதுபார்த்தல், திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் பணியாளர்களுக்கு B.Type மற்றும் C-Type குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், உதவி ஆணையர் ஜெயதேவி, அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, கோயில் செயல் அலுவலர் நாராயணி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
............................
Comments