Skip to main content

தேனியில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு 300 பயனாளிகளுக்கு ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்


தேனி, டிச.6-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட வேலுச்சாமி சீனியம்மாள் மண்டபத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பல்வேறு துறைகளின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த 300 பயனாளிகளுக்கு ரூ.3.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் 6.12.2024 அன்று வழங்கினார்.
இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள்  சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), மாவட்ட வருவாய் அலுவலர் த/இரா.ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா, தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ம.சக்கரவர்த்தி, தேனி நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம், தமிழ்நாடு மீனவர் வாரியம் உறுப்பினர் முருகன், தேனி திமுக வடக்கு மாவட்ட துணை செயலாளர் திருக்கண்ணன், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இத்தகைய நடவடிக்கை வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. 

சுதந்திரத்திற்கு முன்பு பொதுமக்களுக்கு கருத்து சுதந்திரம் என்பது கிடையாது. இதுபோன்ற பல தடைகளை அகற்றி இந்தியாவிற்கு சமத்துவ சமூக நீதியுடன் கூடிய அரசியலமைப்பு சாசனத்தை வடிவமைத்து கொடுத்தவர் சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தான்.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் தமிழ்நாட்டில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டிகொடுத்து ஏழை, எளிய மக்களின் துயர் நீக்கினார். 
சென்னையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் நினைவு மண்டபம் மற்றும் அம்பேத்கர் சட்டக் கல்லூரி நிறுவுவதற்கு அடித்தளமிட்டவரும் கலைஞர் தான். 
அதேபோன்று தேனி மாவட்டத்தை மதுரையிலிருந்து பிரித்து தனி மாவட்டமாக உருவாக்கினார். 
முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மக்களின் வீடுகளை புனரமைக்க ரூ.2000/- கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்கள். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், இலவச பேருந்து பயண திட்டம், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களையும், தற்பொழுது தமிழ்நாட்டில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில்  இன்று, நவீன கழிவுநீர் அகற்றும் வண்டிகளை 100 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கி உள்ளார்கள். 
தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்று அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் காண வேண்டும். இவ்வாறு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.50,000/- மதிப்பிலான இ-பட்டா தலா 44 பயனாளிகளுக்கும், தலா ரூ.6690/- மதிப்பிலான தையல் இயந்திரம் 7 பயனாளிகளுக்கும், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஓய்வூதியமாக தலா ரூ.7650/- வீதம் 2 நபர்களுக்கும், தாட்கோ சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரிய உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு ரூ.5,30,000/-, முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 3 நபர்களுக்கு ரூ.6,77,800/-, வருவாய்த்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழும், சமூக பாதுகாப்புத் திட்டம் – நலிவுற்றோர் குடும்ப நல உதவித்தொகை திட்டத்தின் கீழ் தலா ரூ.20,000/- வீதம் 6 நபர்களுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் சுய தொழில் தொடங்க சமுதாய முதலீட்டு நிதியிலிருந்து 32 நபர்களுக்கு ரூ.22.70 லட்சம் கடனுதவியும், வங்கி நேரடி கடனாக 18 நபர்களுக்கு ரூ.16.89 லட்சமும், வட்டார வணிக வள மையம்-சமுதாய நிறுவன நிதியிலிருந்து தலா ரூ.50,000/- வீதம் 36 நபர்களுக்கும், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ்  தலா ரூ.50,000/- வீதம் 3 நபர்களுக்கும், தொழிலாளர் அட்டை 3 நபர்களுக்கும், 

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் (பொது விநியோகம்) சார்பில்  புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 39 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறையின் சார்பில் பயிர்க்கடனாக 21 நபர்களுக்கு ரூ.19.87 லட்சமும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 6 நபர்களுக்கு ரூ.17.69 லட்சமும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் சேமிப்பு கிடங்கி மற்றும் நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கு 2 நபர்களுக்கு ரூ.1.62 லட்சமும், வேளாண் மற்றும் பொறியியல் துறையின் சார்பில் சோலார் பம்ப், பண்ணை குட்டை, போர்வெல் அமைப்பதற்கு 5 நபர்களுக்கு ரூ.22.93 லட்சமும், 
சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.25,000/- வீதம் வைப்புத் தொகை இரசீது 10 நபர்களுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஒரு பெற்றோர் உள்ள 6 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.35,000/- கால்நடைபராமரிப்புத்துறை சார்பில் புல் நறுக்கும் கருவி, கோழிப்பண்ணை அமைத்தல், கோழிக்குஞ்சுகள் வளர்த்தலுக்கு 4 நபர்களுக்கு ரூ.1.66 லட்சமும், சுகாதாரத்துறை சார்பில் ரூ.5,00,000/- மதிப்பிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 10 நபர்களுக்கும், நகராட்சிகள் துறையின் சார்பில்  ஆத்மநிர்பர் நிதியிலிருந்து தலா ரூ.20,000/- வீதம் 6 தெரு வியாபாரிகளுக்கும், மாற்றத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.1.33 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன், பிரெய்லி வாட்ச், மடக்குச்சி 10 நபர்களுக்கும், 
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் 60%  மானியத்தில் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.45000/- வீதம் 6 நபர்களுக்கும், 60%  மானியத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு சிறிய அளவிலான பயோபிளாக் குளம் அமைப்பதற்கு ஒரு நபருக்கு ரூ.4.50 லட்சமும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மண் வரப்பு அமைப்பதற்கு 6 நபர்களுக்கு ரூ.9.35 லட்சமும், வட்ட அகழி அமைப்பதற்கு  5 நபர்களுக்கு ரூ.6.55 லட்சமும், விவசாயத்துறையின் சார்பில் சிறு நாற்றுப்பண்ணை அமைப்பதற்கு பயனாளி ஒருவருக்கு ரூ.2.50 லட்சமும் என மொத்தம் 300 பயனாளிகளுக்கு ரூ.3.91 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து நகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமபந்தி விருந்தில் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் உணவருந்தினார். 

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments