தேனி, டிச.4-
தேனி மாவட்டம், போடி தாலுகா, அகமலை ஊராட்சி பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் வனத்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி தமிழக விவசாயிகள் சங்க தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேல் தலைமையில் விவசாயிகள் தேனி பங்களா மேடு பகுதியில் 3.12.2024 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அகமலை ஊராட்சி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்
இந்த போராட்டம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, அகமலை ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள அகமலை, அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, சொக்கன் அலை, பெரியமூங்கில், சின்னமூங்கில், பட்டூர், படப்பம்பாறை, சுப்பிரமணியபுரம், பேச்சியம்மன் சோலை, வாழைமாத்தொழு, எருமைதொழு, மருதையனூர், சூழ்துகாடு, அலங்காரம், கானமஞ்சி, டார்சை, முத்துக்கோம்பை, உலக்குரட்டி, கொத்தமல்லி காடு ஆகிய கிராம 400 விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் 15 நாட்களில் விவசாய நிலத்தில் இருந்து வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இங்கு சுமார் 5 தலைமுறைகளாக உள்ள நாங்கள் காப்பி, ஏலம், எழுமிச்சை, மிளகு, அவகோடா, வாழை, பலா ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. மேலும் வனத்துறையினர் விவசாய விளைபொருட்களை வாகனத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். ஏழை மக்களுக்கு குடிநீர் குழாய் அமைக்கவும் தடுத்து வருகின்றனர். மேலும் மின் வசதி இருந்தும் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க தடுத்தும் வருகின்றனர்.
இதனால் அகமலை விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் வனத்துறை மூலம் கொடுக்கப்படும் நோட்டீஸ் ஒவ்வொரு ஆண்டும் தொடர் நிகழ்வாக உள்ளது. அப்புறப்படுத்தப்படும் முயற்சி நிரந்தரமாக நிறுத்தி வைத்தும், விவசாய விளைபொருட்களை வாகனத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கும் வனத்துறை மீது தகுந்த துறைரீதியான நடவடிக்கை எடுத்தும், வனத்துறை மூலம் இனி வரும் காலங்களில் அப்புறப்படுத்தும் நிகழ்வு நடக்காமல் நிரந்தர தீர்வையும், எங்களது வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments