Skip to main content

தேனி மாவட்டத்தில் முறைகேடாக கனிமங்களை வெட்டி எடுத்த 39 குவாரிகளுக்கு ரூ.138 கோடி அபராதம்: குவாரிகளை தடை செய்ய கோரி சிவசேனா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி, டிச.20-

சிவசேனா கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் குரு. அய்யப்பன் தலைமையில் தேனி-மதுரை மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் முருகவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவனிடம் 19.12.2024 அன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி மாவட்டம், பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய தாலுகா பகுதிகளில் செயல்படும் தனியார், அரசு நிலங்களில் உள்ள குவாரிகளில் கனிமவள கொள்ளை நடப்பதாக கடந்த 2020-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனி நபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட நிர்வாகம், கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு உத்தரவிட்டது.

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு பெரியகுளம் வருவாய் கோட்டத்தில் ஆண்டிப்பட்டி, தேனி, பெரியகுளம் ஆகிய தாலுகாவில் உள்ள குவாரிகளில் ட்ரோன் கேமரா மூலம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், அரசு நிலத்தில் செயல்பட்ட 17 குவாரிகள், தனியார் நிலங்களில் செயல்பட்ட 22 குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கற்கள், கிராவல் மண் வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குவாரிகளில் இருந்து ரூ.92.56 கோடி மதிப்பிலான மண் 326 கன மீட்டர், கிராவல் 16.15 லட்சம் கன மீட்டர், உடைகல் 17.59 கன மீட்டர் கூடுதலாக வெட்டி கனிமம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. அதனால், இந்த குவாரிகளை நடத்தி வந்த 58 பேரிடமும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து பெரியகுளம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட 39 குவாரிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட ரூ.92.56 கோடி கனிமத்திற்கான தொகை மற்றும் அதற்கான சீனியரேஜ் கட்டணம் ரூ.15.11 கோடி, அபராத தொகை ரூ.30.23 கோடி என மொத்தம் ரூ.138.4 கோடியை 58 குவாரி உரிமையாளர்களும் செலுத்த வேண்டும் என்று பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத் பீடன் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில் சுமார் ரூ.138.4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அபராதம் விதிக்கப்பட்ட குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவது சட்ட விரோதமானது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகம் தனது பணியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. அதன்பின் நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிமவளத்துறை உதவி இயக்குனர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கனிமவளத்துறை உதவி இயக்குனரிடம் கேட்டால் அபராதம் விதிக்கப்பட்ட குவாரி உரிமையாளர்கள் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரே தெரிவிக்கிறார். 
இருப்பினும் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் காலம் வரை மேற்படி குவாரிகளை நடத்தக்கூடாது என  தேனி கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஏன் தடை செய்யவில்லை. மேல்முறையீட்டு காலம் முடிவதற்குள் மேற்படி குவாரி உரிமையாளர்கள் இதைவிட பல மடங்கு கனிமங்களை வெட்டி கொள்ளையடிக்க வாய்ப்பை கனிமவளத்துறை உதவி இயக்குனரே வழங்குகிறார். அதுபோல ரூ.138 கோடி மதிப்பிலான கனிமங்கள் வெட்டி எடுக்கப்படும் வரை தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் என்ன செய்து கொண்டு இருந்தார். முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கல் குவாரிகளில் சட்ட விரோதமாக வெடி மருந்துகளை பயன்படுத்தியதாக அறிகிறோம். அதற்கு சட்ட விரோதமாக வெடி மருந்துகள் வினியோகித்து யார். இதில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் முறையாக ஆய்வு செய்யவில்லை. மேலும் இதுபோன்ற குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் ஏன் செய்யவில்லை. 
தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில்,அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அபராதம் விதிக்கப்பட்ட அனைத்து குவாரிகளும் இயங்குவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். அதுபோல லைசன்ஸ் இல்லாத குவாரிகளும் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்டு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ள குவாரிகளின் பட்டியலில் உள்ளதை அறிகிறோம். இந்நிலையில் சம்மந்தப்பட்ட குவாரிகாரர்கள் எந்த முகாந்திரத்தோடு கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார்கள்?லைசன்ஸ் இல்லாத குவாரிகள் கனிம வளங்களை வெட்டி எடுக்கும் வரை தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்படியானால் நடைபெற்ற கனிமவள கொள்ளைக்கும் தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.
இதேபோன்று போடிநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாக்களிலும் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள், லைசன்ஸ் காலம் முடிந்த பிறகும் செயல்படும் குவாரிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக கனிம வளங்களை வெட்டி கொள்ளையடிக்கும் குவாரிகள் குறித்து உரிய ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முறைகேடான நடை சீட்டுகள் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அது குறித்தும் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் சம்பந்தப்பட்ட வீடு, அலுவலகங்கள்,அவரது உறவினர்கள் வீடு என அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த வேண்டும். கிருஷ்ணமோகன் மற்றும் அவரது குடும்பத்தார் உறவினர்கள் என அனைவரின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாகராஜ், முதன்மை நிருபர் 
.............................

Comments