தேனி, நவ.22-
தேனி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆர்.வி.ஷஜீவனா 22.11.2024 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊன்றுகோல், மோட்டார் பொருத்திய சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆவாஸ் மென்பொருள் டேப் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை (3.12.2024) முன்னிட்டு, 22.11.2024 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கில் ஓட்டப்போட்டி, நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மனவளர்ச்சி குன்றியவர்கள், பார்வைத்திறன் குறைபாடுடையவர், செவித்திறன் குறைபாடுடையவர், கை கால் பாதிக்கப்பட்டவர் என 350-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிசம்பர் 3 அன்று உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும், இப்போட்டிகளில் முதல் இடம் பிடித்தவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
நாகராஜ், முதன்மை நிருபர் &
செய்தி ஆசிரியர்
Comments