Skip to main content

தேனி-பழனிசெட்டிபட்டி அணை கருப்பசாமி கோவில் பகுதி குற்றவாளிகளின் கூடாரமாக மாறி வருவதை தடுக்க வேண்டும் : சிவசேனா கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, நவ.8-

சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாலமுருகன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் வழியாக செல்லும் அணை கருப்பசாமி கோவில் முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு சமூக விரோதிகள் அதிக அளவு நடமாடுகின்றனர். காலை முதல் இரவு வரை கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை புழக்கம், கள்ளச் சந்தையில் மது விற்பனை என இப்பகுதியில் அனைத்து சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகின்றன. சமூக விரோதிகள் இப்பகுதிக்கு குளிக்க செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். 
மேலும் அவர்களின் பொருட்களையும் திருடிச் செல்கின்றனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இப்பகுதிக்கு வாட்டர் டேங்க் வழியாக செல்லும் பாதையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த கேட் மீண்டும் அமைக்கப்பட்டு கட்டுப்படுத்த வேண்டும். காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். காவல் நிலையம் வழியாக செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இப்பகுதியில் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த போஜராஜ் என்பவரது மகன் தாமோதரன் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் யார் என்று தீவிர விசாரணை செய்து உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல இப்பகுதிக்கு செல்லும் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments