தேனியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்: முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் நடந்தது
தேனி, நவ.23-
தேனி மாவட்டம், வடபுதுப்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு தலைமையில், தேனி மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஆகியோர் முன்னிலையில் 23.11.2024 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் பேசுகையில், தேனி மாவட்டம் இயற்கை எழில் மிகுந்த மாவட்டமாக திகழ்கிறது. எங்கெல்லாம் போதைப்பொருள் இல்லையோ அங்கே சண்டைகள், சச்சரவுகள், வாக்கு வாதங்கள் கலகங்கள் இருப்பதில்லை. அப்படிப்பட்ட உலகம்தான் புதியதோர் உலகமாக இருக்கும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர் வாழ்ந்த வாழ்க்கைக்கும், தற்போது நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது.
நாம் யாருடன் சேர்கிறோம், யாரை உதாரண மனிதர்களாக வைத்திருக்கின்றோம், யாரை மேன்மையாக கருதுகின்றோம், எந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கின்றோம், எது நம்முடைய வாழ்க்கையின் முக்கியம் என்று நினைக்கின்றோம் என்பதை எல்லாம் வைத்துதான் நாம் வெற்றி பெற்ற மனிதர்களாக உருவாக முடியும்.
தற்பொழுது மது, மாத்திரை, கஞ்சா, அபின், நிக்கோட்டின் போன்ற பொருட்களினாலும் மற்றும் சூதாட்டம், ஆன்லைன் கேம்மிங், கைப்பேசி, சமூக ஊடகங்கள் போன்ற பிற காரணங்களாலும் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்படுகிறது.
போதைப்பொருட்களை முதலில் கட்டாயத்தின் பேரில் ஒருமுறை பயன்படுத்துதல், இரண்டாவதாக அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துதல், மூன்றாவதாக நமது நடத்தையில் பிரச்சனை ஏற்படும். நான்காவதாக அதனை சார்ந்து வாழ்தல், ஐந்தாவதாக போதைப்பொருட்களை அதிக அளவு எடுத்துக்கொள்ளுதல், ஆறாவதாக போதைக்கு அடிமையாகும் நிலைக்கு உள்ளாகிறார்கள்.
போதை பொருட்கள் பயன்படுத்துவதால் கை நடுக்கம், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் எலும்புகள் பாதிக்கப்பட்டு மேலும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளும், மன ரீதியான பிரச்சனைகளும், உறவு ரீதியான பிரச்சனைகளும் ஏற்படும். இதனால் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களின் நேரம், பணம், தகுதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்து, சமுதாயத்தில் நற்பெயரையும் இழந்து, இறுதியில் வாழ்க்கையையும் இழக்க நேரிடும்.
இதனை தவிர்க்க போதைப்பொருளினை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட பயன்படுத்தக் கூடாது என அனைவரும் உறுதி கொள்ள வேண்டும். அப்பொழுதான் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வெற்றிபெற்ற மனிதர்களாக வாழ முடியும்.
தங்களது நண்பர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் கூறி தேவையான மருத்துவ உதவிகள் செய்து அவர்களை போதைப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் சொல்லும் அறிவுரைகளைவிட, ஆசியர்கள் சொல்லும் அறிவுரைகளை மாணவர்கள் உடனடியாக பின்பற்றுவார்கள்.
எனவே ஆசிரியர்கள் பாடத்தோடு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள வளாகங்களில் உள்ள கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்வதை தவிர்க்க மாவட்ட அளவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களின் விவரங்களை தெரிவித்து அவர்களின் மறுவாழ்விற்கு மற்றவர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். போதைப்பொருட்கள் விற்பனை குறித்த தகவல்களை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தேனி மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்றலாம் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு பேசினார்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த கருத்தங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், உதவி ஆணையர் (கலால்) சு.ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி சந்தியா, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன், நாடார் சரசுவதி கலை கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
செய்தி ஆசிரியர்
Comments