Skip to main content

தேனி மாவட்ட கோர்ட்டில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்பட கண்காட்சி

தேனி, நவ.21-

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்பட கண்காட்சியினை முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் 21.11.2024 அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
சட்டம் சம்பந்தமான சந்தேகங்களுக்கும், அதனை தீர்ப்பதற்கும் மாநிலம் முழுவதும் இலவச சட்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. சட்டம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களுக்கு தெரியப்படுத்தவும், அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக இந்த விழிப்புணர்வு முகாம் மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி இன்று நடைபெற்றது. 
இந்நிகழ்வின் போது முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்ததாவது,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல ஆண்டுகளாக சட்டம் சார்ந்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் சட்டம் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்த அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து, நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். 

நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை தவிர, சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நோக்கம் மற்றும்  செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சேவைகள் பற்றி தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் 
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு துறைகளின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
இப்புகைப்பட கண்காட்சியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்தித்துறை, சுகாதாரத்துறை, மகளிர் திட்ட மேம்பாடு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத் துறை, குழந்தைகள் நலத்துறை,, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த கண்காட்சியில் தேனி மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டனர். 
மேலும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகளின் விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், மாவட்ட நீதிபதி திருமதி அனுராதா, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, குடும்ப நல நீதிபதி சரவணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ரஜினி, போக்சோ நீதிமன்ற நீதிபதி கணேசன், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி கோபிநாதன் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி (பொ) கீதா,  மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் ஜெயமணி, தேனி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் எம்.கே.எம்.முத்துராமலிங்கம், செல்வன், சந்தான கிருஷ்ணன், செல்வகுமார் உள்பட வக்கீல்கள் பலர்  கலந்து கொண்டனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments