தேனியில் 71-வது கூட்டுறவு வார விழா: ரூ.10.47 கோடி மதிப்பிலான கடனுதவிகளை 1039 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்
தேனி, நவ.18-
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட என்.ஆர்.டி. மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 18.11.2024 அன்று நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ.10.47 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1039 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கூட்டுறவுச் சங்கங்கள் மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து பெரும் பங்காற்றி வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள 119 கூட்டுறவு சங்கங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் மற்றும் பிற உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, மாவட்டத்தின் வேளாண் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. 80 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 48 சங்கங்கள் இலாபகரமாக செயலாற்றி வருகிறது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் அதிக அளவு இலாபகரமானதாக செயல்பட்டுள்ளது. மேலும் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக புதிதாக கடன் தொடங்குபவர்கள் கூட்டுறவு வங்களில் கடன் துவங்குவதன் மூலம் கூட்டுறவு சங்கங்களில் முன்னேற்றம் காண இயலும்.
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் கணினி மையமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் கூட்டுறவு சங்கங்களின் சேவைகளை எளிதில் கிராமங்களிலும் பெற இயலும். கூட்டுறவு சங்கங்களின் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பெறப்படும் பொருட்களுக்கு இரசீது வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேளாண் விளைப்பொருட்கள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 14.4 சதவீதம் அதிகமாக கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பணியாளர் சிக்கன நாணய சங்கம் மூலம் 1.9 சதவீதமும், உர விற்பனையாளர்கள் சங்கங்கள் மூலம் 20 சதவீதமும், பயிர்க்கடன் 8.23 சதவீதமும், குறிப்பாக கால்நடை பராமரிப்பு கடன் 26 சதவீதம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு பயிர்க்கடன், சிறுவணிக கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு கடன் திட்டங்கள், சேவைகள் குறித்தும் மற்றும் கடன் வழங்க கோரி விண்ணப்பிப்பதற்கான முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தேனி மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் இரண்டு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அதிகபடியான உறுப்பினர்களை இணைத்து அவர்களின் பங்களிப்பையும் பெறவேண்டும். மேலும் கடன் பெற்றவர்கள் பெற்ற கடனை முழுமையாக திருப்பி செலுத்திவதிலும் உறுதி கொள்ள வேண்டும்.
சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சாதாரண மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும், கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்திற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷஜீவனா பேசினார்.
அதனைத்தொடர்ந்து 2023-2024 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட 20 கூட்டுறவு சங்கங்களுக்கும், 2 பொது சேவை மையங்களுக்கும், 1 மருந்தகத்திற்கும், சிறந்த விற்பனையாளர்களாக 3 கூட்டுறவு சங்க விற்பனையாளர்களுக்கும், சிறந்த கட்டுநராக ஒருவருக்கும், பள்ளி மற்றும் கூட்டுறவு பட்டய பயிற்சி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவியர்களுக்கும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற கூட்டுறவு பணியாளர்களின் 5 மாணவ, மாணவியர்களை பாராட்டி கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இதனை அடுத்து மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 598 பயனாளிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.7,71,64,076, கால்நடை பராமரிப்பு கடனாக 96 பயனாளிகளுக்கு ரூ.82,22,000, மகளிர் சுய உதவி குழு கடனாக 331 பயனாளிகளுக்கு ரூ.1,87,58,000, சிறுவணிக கடனாக 5 பயனாளிகளுக்கு ரூ.1,75,000, மத்திய காலக் கடனாக 3 பயனாளிகளுக்கு ரூ.1,50,000, தொழில் முனைவோர் கடனாக 6 பயனாளிகளுக்கு ரூ.2,75,000 என மொத்தம் 1039 பயனாளிகளுக்கு ரூ.10,47,44,076 மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, நகர்மன்ற தலைவர்கள் ரேணுபிரியா பாலமுருகன் (தேனி-அல்லிநகரம்), சுமிதா (பெரியகுளம்), மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தேனி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், துணைப்பதிவாளர் செல்வராஜு, இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) கோயில் ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி மாரிசெல்வி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments