முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு கூடுதல் பணம் வசூலித்து முறையான சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனை மீது தேனி கலெக்டரிடம் புகார்
தேனி, நவ.11-
தேனி மாவட்டம், வீரபாண்டி பைபாஸ் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லக்காமு என்பவர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளார். அந்த மனுவில், நான் வீரபாண்டியில் வசித்து வருகிறேன். எனது தாய் பார்வதி அவர்களுக்கு சிறுநீரகக்கல் பிரச்சினைக்காக கம்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9.10.2024 அன்று அட்மிட் செய்தேன். அங்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர்களும் முற்றிலும், இலவசமாக அறுவை சிகிச்சை மற்றும் மற்ற அனைத்து இலவச சலுகைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதி அளித்தனர். அதன்படி கடந்த 10.10.2024 அன்று மாலை பார்வதி ஆகிய எனது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனைக்கு ரூ.31,100 அரசு வழங்கியது. ஆனால் அதை தவிர என்னிடம் மருத்துவமனை நிர்வாக ஊழியர் பிரியா என்பவர் ரூ.41,250-க்கு பில் தருவேன் என்று கூறி 3 தவணையாக கையில் ரொக்கமாக அந்த பணத்தை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்பு அறுவை சிகிச்சை முடிந்தபிறகு பில் கேட்டதற்கு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் போது சம்மரி சான்றிதழுடன் நீங்கள் பணம் செலுத்தியதற்கான பில்லை முறையாக உங்களிடம் ஒப்படைப்பேன் என்று உறுதி அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து சிகிச்சை முடிந்து கடந்த 14.10.2024 அன்று வீடு திரும்பும் முன்பு அவர்களிடம் சம்மரி மற்றும் பில் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் மெஷின் ஒர்க் ஆகவில்லை என்று கூறி சம்மரி
மட்டும் கொடுத்துவிட்டு கடந்த 17.10.2024 அன்று மறு பரிசோதனைக்கு வரும் போது கண்டிப்பாக பில் தருகிறோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் 17.10.2024 அன்றும், எங்களுக்கு பில் தர மறுத்து விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் சேகர் அவர்களிடம் கேட்டபோது மிகவும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதோடு இனிமேல் சிகிச்சை அளிக்க மாட்டேன் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் நீ எங்கு வேண்டுமென்றாலும் புகார் செய்து கொள், உன்னால் என்னை ஒன்றும் பண்ண முடியாது என்று கூறி மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு கூறிவிட்டனர்.
இதனால் மன உளைச்சலான நான் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புகார் மனு அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தனர். ஆனால் அவர்களின் நடவடிக்கை மிகவும் காலதாமதமாக இருந்தது.
எனது தாய்க்கு சீறுநீரக பாதையில் ஸ்டென்ட் என்ற குழாயை அறுவை சிசிக்சையின் போது பொருத்தி உள்ளனர். இதன் காரணமாக கடந்த 26.10.2024 அன்று தாய்க்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக மீண்டும் மருத்துவமனைக்கு சென்று அதற்கு சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டோம். ஆனால் நீங்கள் மருத்துவமனை மீது புகார் தெரிவித்த காரணத்தால் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
கம்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனை எனது தாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் தேனியில் உள்ள தனியார் கிட்னி சென்டரில் அனுமதித்து சிகிச்சை பெற்றார். இதில் சிகிச்சைக்காக ரூ.22,000 மேலும் செலவழித்து உள்ளேன்.
முதலமைச்சரின் காப்பீட்டு திட்ட அதிகாரி நான் கொடுத்த புகாருக்கு கம்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனை கொடுத்த பதில் மனுவின் நகலை அதிகாரி அவர்கள் என்னிடம் கொடுத்தனர். அதில் நம்பகத்தன்மை இல்லாத முரண்பாடான தகவல்கள் உள்ளது. என்னவென்றால் நான் கடந்த 9.10.2024 அன்று என்னிடமும், என் அம்மாவிடமும் எஸ்டிமேட் புரோபார்மா என்ற படிவத்தில் நான் தனியார் மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்ற கொண்டேன் என்ற வாக்கியம் இல்லாதபோது கையெழுத்து வாங்கினார். ஆனால் நான் புகார் செய்த காரணத்தால் அந்த வாக்கியத்தை வெற்றிடத்தில் அவர்களாகவே பூர்த்தி செய்து கொண்டனர். பூர்த்தி செய்த வாக்கியமும், எனது கையொப்பத்திற்கு ஏற்ப சாய்வான முறையில் சோடித்து உள்ளனர். ஆனால் மருத்துவ காப்பீடு அங்கீகாரமே கடந்த 10.10.2024 அன்று மாலை தான் அங்கீகரிக்கப்பட்டு அறுவை சிசிக்சையும் நடைபெற்றது. ஆனால் மருத்துவமனை 9.10.2024 அன்றே காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிசிக்சை செய்து கொண்டதாக தவறாக தெரியபடுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் பொய்யானது என்று அவர்கள் அளித்த பதில் மனுவில் தெளிவாக தெரிகிறது.
இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இந்த மனுவுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.
இதுபோன்று என்னை மட்டும் அல்லாமல், என்னைப்போல் உள்ள ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வண்ணம் சம்மந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கலெக்டர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments