தேனி, அக்.9-
தேனி மாவட்ட விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பால்ராஜ் ஆலோசனை தெரிவிக்கையில்,
பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துபவர்கள் அதற்குண்டான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் காலுக்கு ரப்பர் காலணி அணிய வேண்டும். கைகளுக்கு ரப்பர் உறை அணிய வேண்டும். அதுபோல பூச்சி கொல்லி மருந்து காலி டப்பாவை நிலத்தில் வீசக்கூடாது, வீட்டிலும் வைக்கக்கூடாது. மருந்து அடிக்கும் போது நீர்நிலைகளில் படாமல் கவனமாக அடித்தல் வேண்டும்.
அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் பூச்சி கொல்லி மருந்து படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து தெளிக்கும் போது வயதானவர்கள், நோயாளிகள், கருவுற்ற தாய்மார்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மேலும் பூச்சி கொல்லி மருந்தை கலக்க குச்சிகளை பயன்படுத்த வேண்டும். வாயால் கலக்கவோ, ஊதவோ கூடாது. மருந்து தெளிக்கும் இடத்தில் உணவு உண்ணக்கூடாது. காற்று அடிக்கும் திசையிலே மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்தார்.
நாகராஜ், செய்தி ஆசிரியர்
சசி துரை, சிறப்பு நிருபர்
Comments