Skip to main content

பாரதியார் பல்கலைக்கழக 39-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்பு

கோவை, அக்.15-

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா முனைவர் உஷா கீர்த்திலால் மேத்தா பேரவை அரங்கில் நடைபெற்றது. விழாவில்  தமிழ்நாடு ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவை தலைமையேற்று நடத்தினார். உயர்கல்வித்துறை அமைச்சரும், பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான முனைவர் கோவி. செழியன் பங்கேற்று சிறப்பித்தார். 

விழாவில் ஹைதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேரா B.S.மூர்த்தி பட்டமளிப்பு விருந்தினராக கலந்து கொண்டார், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலரும், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான  கோபால் வரவேற்றார் 

விழாவில் 1,622 முனைவர் பட்ட ஆய்வாளர்களும் முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டங்களில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 298 மாணவர்களும் பட்டங்களையும், தங்கப்பதக்கங்களையும் நேரடியாக பெற்றனர். பட்டமளிப்பு விழாவில்  279 ஆய்வியல் நிறைஞர், 42,312 முதுநிலைப் பட்டப்படிப்பு, 1,17,233 இளநிலை பட்டப்படிப்பு 1,172 முதுநிலை பட்டயப்படிப்பு என மொத்தம் 1,62,618 மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டது.
உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர்  வரவேற்புரையில், பல்கலைக்கழகத்தின் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்."பாரதியார் பல்கலைக்கழகம் தேசியத் தரவரிசைப் பட்டியலில் 3.63  புள்ளியுடன் (NAAC) A++ அங்கீகாரம் பெற்றுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் தேசிய நிறுவனத் தரவரிசைப் பட்டியலில் (NIRF) மாநில அளவில் 8-ம் இடத்தையும் தேசிய அளவில் 26-ம் இடத்தையும் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் 2024-ம் ஆண்டு ஆய்வறிக்கையில் உலக அளவில் தலைசிறந்த விஞ்ஞானிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தை சார்ந்த 19 பேராசிரியர்கள் (2% அளவில்) இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அறிவியலாளர் விருதினை (TANSA) 5 பேராசிரியர்கள் பெற்றுள்ளனர். அதுபோல ரூ.40 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் பணி நிறைவுற்று தமிழ்நாடு முதலமைச்சர்  காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தால் பாரதியின் பாடல்கள் ஆங்கிலத்தில் ஆங்கில இசைப்பேழையாக உருவாக்கப்பட்டுள்ளது. 1,000 பக்கங்களுக்கு மேற்பட்ட பாரதி கவிதைகள் சொல்லடைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளிலும், கல்விப்பணியிலும் பாரதியார் பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது என எடுத்துரைத்தார் 

இதனைத்தொடர்ந்து தொடர்ந்து பேசிய பேரா. B.S. மூர்த்தி "பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெண்கள் மிகுதியாக இருப்பதை பார்க்க மகிழ்வாகவும் பெருமையாக உள்ளது என்றும், கல்வி பயணத்தில் புதிய உலகிற்கு அடியெடுத்து செல்வது உங்கள் பட்டங்களை மட்டுமல்ல. உங்கள் குடும்பம். சமூகம் மற்றும் நம் தேசத்தின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் தான்.
பாரதியின் கல்விச் சிந்தனைகள் முற்போக்கானவை. கல்வி என்பது ஏழைகளுக்கு உதவ வேண்டும், பின்தங்கியவர்களை மேம்படுத்த வேண்டும். ஏவுகணைகளின் நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், "கல்வி மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம். உலகை மாற்ற நீங்கள் இதை பயன்படுத்தலாம்" என்றார் . 
விக்சித் பாரத் என்ற இந்தியாவின் மாபெரும் வளர்ச்சி நோக்கிய பயணத்தில் இருக்கும் நாம், பொறியியல் மற்றும் கணினி அறிவியல் துறையின் முன்னேற்றங்களை மட்டும் நம்பியிருக்க முடியாது. அனைத்துத் துறைகளின் பங்களிப்பும் தேவை. ஹைதராபாத் ஐ.ஐ.டி-யின் நோக்கம் மனிதகுலத்திற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது மற்றும் மேம்படுத்துவது என்பதாகும். நமது இலக்கினை அடைவதற்கு காலநிலை மாற்றம், வளங்களை சுரண்டல், சமத்துவமின்மை, சுகாதாரமின்மை உள்ளிட்டவை தடைகளாக விளங்குகின்றன. இதற்கு பல்வேறு துறைகளின் அறிவை ஒருங்கிணைத்து முழுமையான தீர்வை உருவாக்குவதற்கான முன்முயற்சிகளில் நீங்கள் பங்கெடுக்க வேண்டும். மேலும் வாழ்நாள் முழுவதும் ஆர்வத்துடன் கற்றலை கடைப்பிடியுங்கள். சிக்கல்களுக்கு சிந்தனைகள் மூலம் தீர்வுகளை கண்டறியுங்கள். விக்சித் பாரத் எனும் வளமான, இந்தியாவை உருவாக்கும் தூண்களாக நீங்கள் இருக்க வேண்டும் என்றார்.

பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பேரா. முனைவர் F.X. லவ்லினா லிட்டில் ஃப்ளவர்,  அஜித்குமார், லால் மோகன், சி.ஏ. வாசுகி, பேரா. ரூபா குணசீலன், பதிவாளர் (பொ).தேர்வாணையர் நா.பொன்பாண்டியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments