Skip to main content

தி‌.மு.க தொழிற்சங்கத்துக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிக்க முயற்சி : திருப்பூர் துரைசாமி மீது நிர்வாகிகள் குற்றச்சாட்டு

கோவை, அக்.11-

கோவையில், தி.மு.க தொழிற்சங்கமான எல்.பி.எப். பஞ்சாலை தொழிற்சங்க பிரிவு பொதுச்செயலாளர் சு.பார்த்தசாரதி, முன்னாள் அரசு வழக்கறிஞரும், மாநில சட்டத்துறை இணை செயலாளருமான பி.ஆர்.அருள்மொழி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம்  கூறுகையில்;- 
தி.மு.க தொழிற்சங்கமான எல்.பி.எப். பஞ்சாலை தொழிற்சங்கத்துக்கு சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கட்டிடம், காலிமனை, கடைகள் என மொத்தம் 46 சொத்துக்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.100 கோடி ஆகும். 

இந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குத்தான் சொந்தம் எனக்கூறி, இவற்றை விற்று தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள, தி.மு.க முன்னாள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் திருப்பூர் சு.துரைசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது செயல், பஞ்சாலை தொழிற்சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது. அவர், தி.மு.க-வில் இருக்கும்போது இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். எல்.பி.எப். தொழிற்சங்க பேரவை பொதுச்செயலாளராக 15 ஆண்டுகள் இருந்துள்ளார்.
கடந்த 1993-ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து ம.தி.மு.க தனியாக பிரிந்து போது, அக்கட்சிக்கு சென்றுவிட்டார். கடந்த 2022-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்தும் வெளியேறி விட்டார். தற்போது அவரிடம் தொழிற்சங்கமும் கிடையாது, தொழிலாளர்களும் கிடையாது. ஆனாலும், தி.மு.க-வுக்கு சொந்தமான  ரூ.100 கோடி சொத்துக்களை விற்க முயன்று, முதல்கட்டமாக, தர்மபுரியில் உள்ள 4 சொத்துக்களை ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதன் சந்தை மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். தி.மு.க பஞ்சாலை தொழிற்சங்க சட்ட விதிகளுக்கு மாறாக இந்த சொத்தை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்துள்ளார். 

இதுதொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கூட்டாக கூறினார்கள்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 
செல் : 9976760379

Comments