தேனி, அக்.10-
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக பணியாற்றிய டாக்டர் பாலசங்கர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்ற நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய டாக்டர் விஜய் ஆனந்த் தற்காலிக முதல்வராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் முத்து சித்ராவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக டாக்டர் முத்து சித்ரா பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மருத்துவர்களிடம், முதல்வர் கேட்டறிந்தார். அதன் பின்னர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வார்டு பகுதிகளிலும் சென்று ஆய்வு நடத்தினார்.
புதிதாக பதவியேற்று இருக்கும் டாக்டர் முத்து சித்ராவின் சொந்த ஊர் திருநெல்வேலி என்றும், கடந்த 5 ஆண்டுகளாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை சிகிச்சை துறையின் பேராசிரியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகராஜ், முதன்மை நிருபர்
சசிதுரை, சிறப்பு நிருபர்
Comments