தேனி மாவட்டத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாமில் 83 பேருக்கு ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் : கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா வழங்கினார்
தேனி, அக்.10-
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், அரப்படிதேவன்பட்டியில் உள்ள என்.ஆர்.டி செவிலியர் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரியில் 10.10.2024 அன்று நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் முகாமில் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா 83 மாணவர்களுக்கு ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளை வழங்கினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் பேசுகையில், மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் மாபெரும் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாம்கள் மூலம் வங்கிகளில் உள்ள கடன் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளவும், கடன் வாங்குவதற்கான புரிதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும். கல்லூரியில் முதலாமாண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைவருக்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
மாணவர்கள் கல்வி கடன் பெறுவதற்கு உரிய ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். கடன் பெற்ற பிறகு அதனை முறையாக திரும்ப செலுத்த வேண்டும். கல்விக்கடன் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும், சக மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த 30.8.2024 அன்று பாரத் நிகேதன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற கல்விக்கடன் முகாமில் 127 மாணவர்களுக்கு ரூ.10.62 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வழங்கினார்.
இன்று நடைபெற்ற இரண்டாவது கல்விக்கடன் முகாமில் 83 மாணவர்களுக்கு ரூ.5.86 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு ரூ.71 லட்சம் கல்வி கடனுதவி வழங்கப்பட்டது.
மேலும் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் மாதம் ரூ.1000 கல்வி ஊக்கத்தொகையாகவும், பல்வேறு கல்வி சார்ந்த சிறப்பு திட்டங்களும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்வி கற்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு கடனுதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பேசினார்.
இந்த கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரி, சட்டக் கல்லூரி போன்ற அனைத்து வகையான கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) படிக்கும் 500 மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டதில் உள்ள வங்கிகளின் மேலாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு மாணவர்கள் இணையதளத்தில் சுலபமாக கல்விக்கடன் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான பணிகள் மற்றும் வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, உலக மனநல தினத்தை முன்னிட்டு மனநல ஆலோசகர் மன நலன் குறித்த ஆலோசனைகளை மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த முகாமில் முன்னோடி வங்கி மேலாளர் கே.விஜயசேகர், கல்லூரி தாளாளர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயக்குநர் ம.ரவிக்குமார் நிதிசார் கல்வி அறிவு மையம் ஆலோசகர் பி.ஸ்ரீமுருகன் மற்றும் வங்கிகளின் மேலாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments