கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்களால் ஜல்லி கற்கள், எம்.சாண்ட் மண் திடீர் விலை ஏற்றம்: டிப்பர் லாரி உரிமையாளர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு
தேனி, செப்.24-
தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் செயலாளர் காஜா மைதீன் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் சங்கத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறோம். தேனி மாவட்டத்திலும், தேனி மாவட்டம் அருகே உள்ள அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கும் கட்டுமான பொருட்களை தேனி மாவட்டத்தில் உள்ள கிரஷர்களில் இருந்து எடுத்துச் சென்று விற்பனை செய்து கொண்டு வருகிறோம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் செயல்படும் வைகை கல் குவாரி மற்றும் ஜல்லி கிரசர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென பல மடங்கு விலையேற்றம் செய்தனர். இதுவரை கடந்த ஒரு ஆண்டுகளில் மூன்று முறை விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் யூனிட் ஒன்றுக்கு ரூ.200 முதல் 300 வரை மட்டுமே உயர்த்தப்பட்டது.
ஆனால் இந்த முறை ஒரு யூனிட்டுக்கு ரூ.3000 இருந்த எம்.சாண்ட் 4000 ரூபாயாகவும், ரூ.4000 இருந்த பி.சாண்ட் ரூ.5000 ரூபாயாகவும் மற்றும் ஜல்லிகற்கள் பல மடங்கு வித்தியாசத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாங்களும், கட்டுமான தொழிலாளர்களும், பொதுமக்களும் மற்றும் எங்களை சார்ந்த நிறுவனங்களும் கடந்த 19-ம் தேதி முதல் கிரசர் சங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இதுகுறித்து கிரசர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய போது அவர்கள் தேனி மாவட்ட கனிமவளத்துறை தங்களது கல்குவாரிகளுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை அபராதம் விதித்து உள்ளார்கள். மேலும் மின் கட்டணம் உயர்வு அதிகாரிக்கு கொடுக்கும் மாமூல் என பல்வேறு தேவைகள் இருப்பதால் வேறு வழியில்லாமல் விலையேற்றம் செய்ததாக சொல்கிறார்கள். இதனால் நாங்களும், பொதுமக்களும் எங்கள் துறை சார்ந்த நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.
எனவே எங்கள் அனைவருடைய வாழ்வாரத்தை கருத்தில் கொண்டு விலையேற்றத்தை தடுத்து நிறுத்தி இனிவரும் காலங்களில் விலையேற்றம் செய்யும் போது சரியான முன் அறிவிப்பு செய்து விலையேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நாகராஜ், முதன்மை நிருபர்
Comments