மது போதை தகராறில் தொழிலாளி காலில் ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்தது: நுண் அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு பாராட்டு
கோவை, செப்.20-
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வாரம், ஈரோடு அம்மா பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செந்தில் குமார் (வயது 45) தனது நண்பருடன் மது குடிக்கும் போது போதையில் ஏற்பட்ட தகராறில் ,நண்பர் ஏர்கன் துப்பாக்கியால் சுட்டதில் வலது கால் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கபட்டார். இதனை அடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் ஏர்கன், ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக உள் இருந்தது கண்டறியப்பட்டது.
நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பிறகு, அவருக்கு இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதில், துப்பாக்கியால் சேதமடைந்த ரத்த நாளம் வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டு, எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக இருந்த துப்பாக்கி குண்டு வெற்றிகரமாக மீட்டு எடுக்கப்பட்டது. இதனால் நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டது. தற்போது செந்தில்குமார் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்.
இதில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர் கூறுகையில் நோயாளியின் காலின் முக்கிய இரத்த நாளத்தில் ஒட்டி இருந்ததால் துப்பாக்கி குண்டை அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது. இந்த பிரதான இரத்த நாளத்தை துளைத்திருந்தால், மருத்துவமனையை அடைவதற்குள் முன்பே, உயிர் இழக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏர்கன்களின் ஆபத்தான தன்மை காரணமாக, அதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் மற்றும் சட்டப்பூர்வ உரிமம் வைத்திருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என்றார்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர், அ.நிர்மலா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் கண்ணதாசன், நோயாளியின் உயிரை வெற்றிகரமாக காப்பாற்றிய இரத்த நாள நிபுணர்கள் ப.வடிவேலு, பா.தீபன்குமார் மற்றும் மயக்க மருந்து நிபுணர்களான பேராசிரியர் கனகராஜன். சந்திரகலா ஆகியோரை வெகுவாக பாராட்டினார்கள்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments