ஆண்டிபட்டி, செப்.16 -
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஜக்கம்மாள்பட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவனம்மாள் சுவாமி, ஸ்ரீ கருப்பசாமி, கன்னிமார்கள் சுவாமிகள் கோவிலின் மகா கும்பாபிஷேகம் 15.9.2024 அன்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோவில் முன்பாக யாகசாலை பூஜைகள் நடத்தி பூர்ணாகுதி செய்யப்பட்டு ,மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்து கடங்கள் புறப்பாடாகி, விமான கலசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது.
அதன் பின்னர் புனித நீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.தொடர்ந்து கோவிலில் உள்ள மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சங்கு தேவர் கொத்து வழிக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
சசி துரை, சிறப்பு நிருபர்
Comments