Skip to main content

தங்கக்கட்டிக்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றிய மோசடி கும்பலை கைது செய்த கோவை போலீசார்: சினிமாவை மிஞ்சிய சம்பவம் நடந்தது என்ன.?

கோவை, செப்.14-

சதுரங்க வேட்டை சினிமா காட்சியில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்றுனும்னா, முதல்ல அவன் ஆசையை தூண்டனும் என்பது போல ஒரு சம்பவம், கோவையில நடந்து இருக்கு, எங்க எப்படிங்கறத சொல்றேன்,  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஹரிசங்கர் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். தங்கம் விற்பதை அறிந்து கொண்ட மர்ம நபர், அவரது செல்போனுக்கு தன்னை சந்திரசேகர் என அறிமுகபடுத்தி கொண்டு, ஹரிசங்கரிடம் செல்போனில் முதலில் அன்பாக, பணிவாக பேசியவர், தன்னிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து அதிகமா பணம் இருப்பதாகவும் அந்த பணத்தை, அதற்கு பதிலாக தங்க கட்டிகளாக வாங்கலாம் என்று கருதுகிறேன் எனவே உங்களிடம் தங்க கட்டிகள் இருப்பதை அறிந்தேன். அதனை நீங்கள் விற்பதாக இருந்தால் தங்கத்தை என்னிடம் தாருங்கள் நான் அதற்கு  பணமாக தருகிறேன் என்று சந்திரசேகரன் ஆசை வார்த்தைகளில் பேசியுள்ளார். 

இதனை உண்மை என்று நம்பிய  ஹரிசங்கர், நீங்க விரும்பும் தங்கத்தை தருகிறேன் அதற்கு பணம் உடனடியாக தரவேண்டும் என கூறியுள்ளார். சரி என கூறிய நபரிடம், ஹரிசங்கர் தன்னிடம் ஒரு கிலோ தங்கம் கட்டியாக இருப்பதாகவும், அதற்கு இவ்வளவு பணம் தரவேண்டும் என கேட்டு உள்ளார், 

இதற்கு தலையாட்டிய நபர் சரி மீனு  தூண்டிலில் சிக்கி விட்டது என புரிந்து கொண்ட திருட்டு கும்பல்,  நீங்க தங்க கட்டிய கோவை சூலூருக்கு கொண்டு வாங்க என்று பேச அதனை சரி என்று நம்பி ஹரிசங்கர் தங்கத்துடன் பஸ் ஏறி கோவைக்கு கடந்த செப் 11-ம் தேதி வந்துள்ளார். அப்ப அங்கு வந்ததும் பேசிய அவர் 1 கிலோ தங்க கட்டிகளுடன் தான் வந்ததைது செல் போனில் பேச சரி சூலூரில் உள்ள பாப்பம்பட்டி பிரிவிற்கு வாருங்கள் என போனில் ஹரிசங்கரை அழைத்துள்ளார் மோசடி கும்பலை சேர்ந்த நபர்.

இந்நிலையில் ஹரிசங்கர் ஒரு கிலோ தங்க கட்டிகளுடன் அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்த பிறகு சந்திரசேகரன் என்ற அந்த நபர் சிறிது நேரம் கழித்து ஹரிசங்கரை மீண்டும் செல்போனில் பேசி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தன்னுடைய மேனேஜர் ராஜ்குமார் என்பவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். சரி என்றவர் அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் சொன்ன இடத்தில் காத்து இருந்த போது ராஜ்குமார் என்பவர் தன்னை சந்திரசேகர் அனுப்பி வைத்தார் என அறிமுகபடுத்தி  ஹரிசங்கரிடமிருந்த ஒரு கிலோ தங்க கட்டிகளை வாங்கி கொண்டுள்ளார். பிறகு தனது வாகனம் பழுதாகி விட்டதாகவும் அதனை சரி செய்துவிட்டு தான் பின்னால் வருவதாக கூறி ஹரிசங்கரை பஸ்ஸில் ஏற்றி விட்டு  லட்சுமி மில் பஸ் ஸ்டாப் பகுதியில் இறங்கிய பிறகு தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். பிறகு ஹரிசங்கர் லட்சுமி மில் பஸ் ஸ்டாப் க்கு வந்த பிறகு ராஜ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவருடைய மொபைல் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனை கண்டு அதிர்ந்த ஹரிசங்கர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பதட்டம் அடைந்தவர், தங்ககட்டியை தன்னிடம் வாங்கிய இடமான சூலூரில் வந்து அக்கம் பக்கத்தில்  விசாரித்து உள்ளனர். அங்கு எவருக்கும் தெரியாத நிலையில் அருகே உள்ள காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். 

இப்புகார் பற்றியை விபரம் எஸ்.பி., கார்த்திகேயனிடம் தெரிவிக்க, அவரின் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் உடனடியாக அமைக்கப்பட்டு, தங்ககட்டி வாங்கி மோசடி செய்த நபர்களை விரைந்து பிடிக்கவும்,  தலைமறைவான  குற்றவாளிகளை குறித்த அடையாளங்களை சேகரித்து  கொண்டு விசாரணை மேற்கொண்டனர், இதனிடையே சம்பவம் நடந்த பகுதி, சாலைகளில்  உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து பார்த்தும் வந்தனர். மேலும் , சைபர் கிரைம் போலீசார் உதவியுடனும் தேடுதலில் ஈடுபட்டனர்.  

இந்த தீவிர புலன்விசாரணை மேற்கொண்டதில்  தங்க கட்டிகளை வாங்கி ஏமாற்றியவர்கள், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மணி மகன் பாபு (வயது 53) , மயிலரசன் மகன் நவீன் குமார் (வயது 25) , செல்வராஜ் மகன் பிரபு (வயதூ 25) என்றும் இவர்களுடன் தங்ககட்டி பறிப்பில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் இருப்பதை அறிந்தனர்.

மேலும் தங்க கட்டி வைத்திருந்த  ஹரிசங்கரை ஏமாற்றி அவரிடமிருந்த ஒரு கிலோ தங்க கட்டியை பறிக்க திட்டமிட்டு மோசடி செய்தது தெரியவந்தது. இந்நிலையில்  இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் பதுங்கி இருந்த இருப்பிடத்தை கண்டு பிடித்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் கைது செய்தனர். ஏமாற்று பேர் வழிகளிடம் இருந்த 1 கிலோ தங்கக் கட்டியை பறிமுதல் செய்து திருட்டில் சம்பந்தப்பட்ட சிறுவன் உட்பட நான்கு நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி உத்தரவுபடி  இக்குற்றத்தில் சம்மந்தப்பட்ட சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கும், மற்ற 3 பேரை  கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

தங்க கட்டிகளை நூதனமாக  ஏமாற்றி வாங்கி சென்ற குற்றவாளிகளை ,துரிதமாக செயல்பட்டு, சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் சினிமா காட்சி போல விரட்டி பிடித்த தனிப்படை போலீசார்களை கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார்.

ஏமாறுபவன் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுபவன் இருக்க தான் செய்வான்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments