Skip to main content

தேனி மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம். ஆண்டிபட்டி, கடமலை-மயிலை தேனி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 30.8.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அமைச்சர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சி பகுதியில் நபார்டு திட்டத்தின்கீழ் அக்ரஹாரம் பகுதியில் வராக நதியின் குறுக்கே ரூ.4.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியினையும். 15-வது நிதி மானியக்குழு 2023-2024 திட்டத்தின்கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணியினையும்,

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொம்மிநாயக்கன்பட்டி, புல்லக்காபட்டி, கோத்தலூத்து ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம் பணியினையும், இராஜதானியில் 15-வது நிதிகுழு மானியம் (பொது சுகாதாரம்) 2022-23 திட்டத்தின்கீழ் ரூ.39.68 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மையம் முடிவுற்ற பணியிணையும். நபார்டு 2023-2024 திட்டத்தின்கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் நாகார் ஓடை சுந்தரராஜபுரம் சாலை முதல் இராமகிருஷ்ணாபுரம் சாலையில் பாலம் அமைக்கும் பணியினையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் இராஜதானி ஊராட்சியில் ரூ.34.90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சுந்தரராஜபுரம் சாலை முதல் இராமகிருஷ்ணாபுரம் வரை தார்ச்சலை அமைக்கும் பணியினையும். தெப்பம்பட்டி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்தின்கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டும் பணியினையும் மற்றும் 24 நபர்களுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் ரூ.84 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட எட்டப்பராஜபுரம் ஊராட்சியில் முதல்வரின் கிராமச்சாலைகள் அமைக்கும் திட்டத்தின்கீழ் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் முடிவற்ற கணேசபுரம் முதல் விருமனூத்து வரை தார்ச்சாவை அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2024-2025- ன் கீழ் ஆத்தங்கரைப்பட்டி ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வளச்சித்திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட துறை  அலுவலர்களுக்கு அமைச்சர்  அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின் போது தேனி ஊராட்சி ஒன்றியம் ஐங்கால்பட்டி ஊராட்சியில் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு முடிவுற்ற கலைஞரின் கனவு மாதிரி இல்லத்தை திறந்து வைத்து பயனாளிக்கு வழங்கினார்.

ஆய்வின் முடிவில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,
தமிழ்நாட்டில் வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு. தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. "கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-2025ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். 

அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாட்டில் தகுதியுள்ள அனைத்து குடிசை வீடுகளையும், கான்கிரீட் வீடுகளாக மாற்றும் நோக்கத்துடன் குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களை மதிப்பீடு செய்வதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் மாநிலம் முழுவதும் கட்டி வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி
தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ம.சக்கரவர்த்தி உள்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments