தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து, தேனியில் ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை 29.7.2024 அன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா, புதிய அலுவலக கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி வைத்து அலுவலக பகுதிகளை பார்வையிட்டார்.
அப்போது தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், மோனிகா, ஒன்றிய கவுன்சிலர்கள் கிருஷ்ணசாமி, பிரகாஷ், சங்கீதா, மாலா, பொறியாளர்கள் சோனா, அஜய், ஒப்பந்ததாரர் முத்து கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில், தரை தளம் மற்றும் முதல் தளம் என 2 தளங்களாக கட்டப்பட்டுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைர், வட்டார வளர்ச்சி அலுவலர், மற்றும் பொறியாளர்களுக்கான தனித்தனி அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்ட அரங்கம், கணினி அறை, பயிற்சி அரங்கம், மின்தூக்கி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அறைகளுடன் நவீன வசதிகளுடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதேபோன்று கம்பத்தில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பழனிமணி, துணைத்தலைவர் தங்கராசு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனி, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments