Skip to main content

தேனி மாவட்டத்தில் 3-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 30 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் 3-வது நாளாக உத்தமபாளையம் தாலுகாவிற்கு  உட்பட்ட க.புதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம், மேலக்கூடலூர் (தெற்கு), மேலக்கூடலூர் (வடக்கு),  கீழக்கூடலூர் (மேற்கு), கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 2.7.2024 அன்று நடைப்பெற்றது.

            
அதுபோல பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் கீழவடகரை, வடகரை பகுதி- 1, பகுதி- 2, தென்கரை பகுதி- 1, பகுதி-2 ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி  தலைமையிலும், தேனி தாலுகா அலுவலகத்தில் பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் ஆகிய கிராமங்களுக்கு தேனி உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன்  தலைமையிலும், ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் மொட்டனூத்து ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி ஆகிய கிராமங்களுக்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன்  தலைமையிலும்,      போடிநாயக்கனூர் தாலுகா அலுவலகத்தில் டொம்புச்சேரி, கூழையனூர், போடிநாயக்கனூர், மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை ஆகிய கிராமங்களுக்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி தலைமையிலும் ஜமாபந்தி நடைபெற்றது.

இந்த ஜமாபந்தியகல் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் வீட்டுமனைப் பட்டாக்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ் குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை  உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உத்தமபாளையம் தாலுகாவில் 133 மனுக்கள், பெரியகுளம் தாலுகாவில் 153 மனுக்கள், தேனி தாலுகாவில் 224 மனுக்கள் போடிநாயக்கனூர் தாலுகாவில் 645 மனுக்கள், ஆண்டிபட்டி  தாலுகாவில் 270 மனுக்கள் என மொத்தம் 1425  மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட கலெக்டர் ஷஜீவனா  துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே உத்தமபாளையம் தாலுகாவில் வருவாய்த்துறையின் சார்பில் பட்டா மாறுதல் 10 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.13,349 மதிப்பிலான ஸ்மார்ட்போன் 8 நபர்களுக்கும், தலா ரூ.96,011 மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் 7 நபர்களுக்கும், முதுகுதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.1,13,467 மதிப்பிலான ஸ்பைனல் பெட்ரோல் ஸ்கூட்டரும், தலா ரூ.2,780 மதிப்பிலான காதொலி கருவி 3 நபர்களுக்கும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவருக்கு இலவச பேருந்து பயண அட்டை என மொத்தம் 30 நபர்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

இந்நிகழ்வின் போது உதவி இயக்குநர் (நில அளவை) ப.அப்பாஸ்,  மாவட்ட கலெக்டர் அலுவலக பொது மேலாளர் ஜஸ்டின் சாந்தப்பா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் , காமாட்சி, தாசில்தார் சுந்தர்லால் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர்  உடனிருந்தனர்.

Comments