தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வு:வீட்டுக்கு 2 சிம்னி விளக்குகள் மற்றும் 10 லிட்டர் மண்எண்ணெய் வழங்க வேண்டும்; தேனி கலெக்டர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் பெட்டர்மாஸ் லைட்டுன் நூதன முறையில் கோரிக்கை
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிவசேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் மாவட்ட தலைவர் முருகவேல், மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் கட்சியினர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில், தமிழ்நாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும்,பல மணி நேரம் மின்வெட்டு தலை தூக்கியது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டே செல்லும் நிலை ஏற்பட்டது.மேலும் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்பட்டதுடன் கற்கால வாழ்க்கையான சிம்னி விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டு, ஆட்டுக்கல் மற்றும் அம்மிக்கல்லில் அரைத்து பழகினர்.
கடந்த 2011 இல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அப்போதைய முதலமைச்சர் படிப்படியாக மின்வெட்டை சரி செய்து மின்மிகை மாநிலமாக மாற்றிக் காட்டினார். மேலும் 2011 இல் இருந்து 2021 வரை அதிமுக ஆட்சி காலத்தில் மின்மிகை மாநிலமாக மாற்றியதுடன் மின் கட்டணம் என்பது ஒரு முறை கூட உயர்த்தப்படவில்லை.
ஆனால் திமுக அரசு 2021 இல் பொறுப்பேற்றதில் இருந்து பல மடங்கு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது.குறிப்பாக அதிமுக ஆட்சியில் ரூ.300 வரை மின்சார கட்டணம் கட்டியவர்கள் எல்லாம் திமுக ஆட்சியில் ரூ.800 முதல் 900 வரை மின் கட்டணமாக கட்டி வருகின்றனர்.
மேலும் தற்போது மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தி இருப்பதன் மூலம் அவர்கள் ரூபாய் ஆயிரம் முதல் 1200 வரை மின்கட்டணம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக நகர்ப்புறங்களில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் அதிகமாக உள்ள சூழலில் குறைந்த பட்சம் ரூ.2500 வாடகை வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண ஏழை தொழிலாளி மின்கட்டணமாக ரூ.1200 முதல் 1500 வரை செலுத்தினால் அவரது வீட்டு வாடகை கணக்கு ரூ.3700 முதல் 4000 ஆக உயர்ந்து விடுகிறது. இதேபோல ரூ.7000 வாடகைக்கு குடியிருப்பவர்கள் 3 ஆயிரம் முதல் நான்காயிரம் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியது இருப்பதால் அவர்களின் வீட்டு வாடகை கணக்கு ரூ.11 ஆயிரமாக உயர்ந்து விடுகிறது. இதில் எப்படி அவர் குடும்பத்தை நடத்த முடியும்? எப்படி இந்த தமிழகத்தில் வாழ முடியும்.எப்படி குழந்தைகளை படிக்க வைக்க முடியும்? இதனால் அந்த குடும்பங்களின் எதிர்காலமே சீரழிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் திமுக ஆட்சிக்கு வரும்போது மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆனால் தேர்தல் வாக்குறுதியை மீறி மின் கட்டணத்தை தொடர்ந்து பலமுறை உயர்த்தி வருகிறார். இதனால் சாதாரண மக்கள் மின் கட்டணம் கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே சாமானிய மக்களும் தமிழகத்தில் வாழ வேண்டும் என்றால் அவர்கள் மீண்டும் கற்காலத்தை நோக்கி செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு முன்மாதிரியாக தேனி மாவட்ட நிர்வாகம் விளங்க வேண்டும்.
அதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் முதல் கட்டமாக தலா 2 சிம்னி விளக்குகளும், அதனை எரிய வைப்பதற்காக மாதந்தோறும் 10 லிட்டர் மண்எண்ணெய்யும் இலவசமாக வழங்க வேண்டும்.
அரசு அலுவலகங்களுக்கும், மாணவ, மாணவிகள் படிக்கும் அரசு விடுதிகள், அரசு பொது மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் வார்டுகள் உள்ளிட்ட அதிகமான மக்கள் இருக்கும் பகுதிகளுக்கு அரிக்கேன் விளக்குகளும், மாதந்தோறும் 30 லிட்டர் மண்எண்ணெய்யும் வழங்க வேண்டும்,
இது தவிர பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஆட்டுக்கல், அம்மிக்கல் உள்ளிட்டவற்றையும் குறைந்த விலையில் விறகுகளையும், விறகு அடுப்புகளையும் வழங்க வேண்டும் எனவும்,அந்த நிகழ்வை ஒரு விழாவாக நடத்தி, அதன் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்து தொடங்கி வைக்க வேண்டும் எனவும், அந்த நிகழ்வில் மின்சாரத்துறை அமைச்சர் என்கிற பெயரை மாற்றி "கற்காலத்தை மீட்ட அமைச்சர் " என்று பட்டம் சூட்ட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
சிவபாலன், சிறப்பு நிருபர்
Comments