Skip to main content

தேனி-மதுரை சாலையில் இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி: ஜூலை 19 முதல் வாகன போக்குவரத்தில் மாற்றம்

தேனியில் உள்ள மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் காரணத்தால் 19.7.2024 முதல் 28.7.2024 வரை பொதுமக்கள் மாற்றுப்பாதையில்  செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா  தலைமையில் 13.7.2024 அன்று நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்  முத்து மாதவன், தேனி துணை காவல் கண்காணிப்பாளர்  பார்த்திபன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ரவிக்குமார், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சுவாமிநாதன், தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் ரம்யா, தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாட்ஷா உள்பட பலர் உள்ளனர். 

அப்போது கூட்டத்தில் மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை-49 நீட்சி சாலையில் தேனி-ஆண்டிபட்டி இரயில் நிலையங்களுக்கு இடையில் சேதுபாரதம் திட்டத்தின் கீழ் இரயில்வே மேம்பாலம் கட்டுதல் பணி நடைபெற்று வருவதால் 19.7.2024 முதல் 28.7.2024 வரை பொதுமக்கள் மாற்றுப்பாதை வழித்தடங்களில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாற்றுப்பாதைக்கான வழித்தடங்கள்:
மதுரையிலிருந்து தேனி வழியாக கம்பம் மற்றும் போடி செல்வதற்கு:
பயணி பேருந்துகள்: தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையம் அருகில் உள்ள திட்டச்சாலை - புதிய பேருந்து நிலையம் - புறவழிச்சாலை - இரயில்வே கடவு வழியாக (ஒருவழியாக) செல்லவும்.

இலகுரக வாகனங்கள்: கருவேல்நாயக்கன்பட்டி சாலை வழியாக அரண்மனைபுதூர் விலக்கு (ஒருவழியாக) செல்லவும்.
கனரக வாகனங்கள்: கண்டமனூர் விலக்கு – கண்டமனூர் - அம்பாசமுத்திரம் விலக்கு – கோவிந்தநகரம் – வெங்கடசலாபுரம் – தப்புக்குண்டு - உப்பார்பட்டி விலக்கு வழியாக செல்லவும்.


கம்பம் மற்றும் போடியிலிருந்து தேனி வழியாக மதுரை செல்வதற்கு:
பயணி பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்: பழைய பேருந்து நிறுத்தம் – அல்லிநகரம் - அன்னஞ்சி விலக்கு - புதியபேருந்து நிலையம் - நகராட்சியின் திட்டச்சாலை (தேனி அரசு தொழிற் பயிற்சி நிலையம் அருகில்) வழியாக செல்லவும்.

கனரக வாகனங்கள்: திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலை – வடுகப்பட்டி – மேல்மங்கலம் -  வைகை அணை சாலை வழியாக செல்லவும்.

அரண்மனைபுதூர் விலக்கிலிருந்து தேனி செல்வதற்கு:
பயணி பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்: தற்பொழுது உள்ள மதுரை-கொச்சின் தேசிய நெடுஞ்சாலை வழியாக (ஒருவழியாக) செல்லலாம்.

கம்பம் மற்றும் போடியிலிருந்து தேனி வழியாக திண்டுக்கல் செல்வதற்கு:
பயணி பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்: பழைய பேருந்து நிறுத்தம் – அல்லிநகரம் - அன்னஞ்சி விலக்கு - புதிய பேருந்து நிலையம் - புறவழிச்சாலை வழியாக செல்லவும்.

மேற்குறிப்பிட்டுள்ள மாற்றுப் பாதையினை மேம்பால பணிகள் முடியும் வரை பயன்படுத்திட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
 
சிவபாலன், சிறப்பு நிருபர்



Comments