Skip to main content

தேனி நகரில் அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர்கள் வைத்தால் ரூ.25 ஆயிரம் அபராதம்

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதி மாவட்டத்தின் தலைநகரில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் அரசியல் கட்சிகளின் பிளக்ஸ் பேனர்கள், வணிக நிறுவனங்களின் பேனர்கள், கோவில் திருவிழா, திருமணம் மற்றும் பல்வேறு விழாகளுக்கான பிளக்ஸ் பேனர்கள் வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


இந்த பேனர்கள் வைப்பதனால் நகரில் போக்குவரத்து நெரிசலும், வர்த்தக பாதிப்பும், சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த பிளக்ஸ் பேனர்கள் வைப்பதை தடுப்பதற்காக நகராட்சி நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் தான் பேனர்கள் வைக்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பேனர்கள் வைக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர் கதையாகி கொண்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இன்று தேனி நகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றும் பணி தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் சலீம் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். அப்போது அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்கள் மற்றும் சாலைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை திசை திருப்பும் வகையில் மின் கம்பங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் வணிக நோக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தட்டி போர்டுகள் அகற்றப்பட்டன. 

தேனி நகரில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது குறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவித்தாவது, தேனி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் முறையான அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் தட்டி போர்டுகள் வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நகராட்சி சட்ட விதிகளின்படி ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிக்கப்படும். 

இதனையும் மீறி தேனி நகரில் தொடர்ந்து பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது நகராட்சி சட்ட விதிகளின்படி சட்டபூர்வமான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 


Comments