Skip to main content

தேனி மாவட்டத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 1148 கோரிக்கை மனுக்கள்

 


தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம், தேனி ஆகிய 5 தாலுகாக்களில் வருவாய் தீர்வாயம் என்னும் ஜமாபந்தி 2-வது நாளாக 28.6.2024 அன்று நடைபெற்றது.


இதில் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிபுரம்,  சங்கராபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி மாவட்ட கலெக்டர் ஆர்.வி. ஷஜீவனா தலைமையிலும், பெரியகுளம் தாலுகாவில் உள்ள ஜெயமங்கலம் பகுதி - 1, பகுதி - 2, குள்ளப்புரம், மேல்மங்கலம் பகுதி-1, பகுதி-2 கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்  இரா.ஜெயபாரதி தலைமையிலும், தேனி தாலுகாவில் உள்ள கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கிராமங்களுக்கு தேனி உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன் தலைமையிலும், ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள புலிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர் பகுதி -1, பகுதி -2 கிராமங்களுக்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் தலைமையிலும்,          போடிநாயக்கனூர் தாலுகாவில் உள்ள போ.மீனாட்சிபுரம், பூதிப்புரம், கோடாங்கிபட்டி, உப்புக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியரா தாட்சாயினி தலைமையில்  ஜமாபந்தி நடைபெற்றது.

இந்த ஜமாபந்தியில்  பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டாக்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உத்தமபாளையம் தாலுகாவில் 207 மனுக்கள், பெரியகுளம் தாலுகாவில் 230 மனுக்கள், தேனி தாலுகாவில் 142 மனுக்கள், போடிநாயக்கனூர் தாலுகாவில் 269 மனுக்கள், ஆண்டிபட்டி தாலுகாவில் 300 மனுக்கள் என மொத்தம் 1148  மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 

இந்த வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட கலெக்டர்  துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 

வேளாண்மை துறையின் சார்பில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் மண் வளத்தை பேணிகாப்பதற்கு, பசுந்தால் உரம்(தக்கை பூண்டு விதை) 2 பயனாளிக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.13,349/- மதிப்பிலான ஸ்மார்ட்போன் 18 பயனாளிகளுக்கும், 4 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டையும்,  வருவாய்த்துறையின் சார்பில் பட்டா மாறுதல் 2 பயனாளிகளுக்கு என மொத்தம் 24 நபர்களுக்கு ரூ.2.4 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ஜஸ்டின் சாந்தப்பா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பாண்டியன், உதவி ஆசிரியர் 

Comments