Skip to main content

தேனி மாவட்டத்தில் முதல் நாளில் நடந்த ஜமாபந்தியில் 1208 கோரிக்கை மனுக்கள்


தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகாக்களில் வருவாய் தீர்வாயம் என்னும் ஜமாபந்தி 27.6.2028 முதல் தொடங்கியது. 

இந்த ஜமாபந்தி 27.6.2024 முதல் 5.7.2024  வரை (29.6.2024, 30.6.2024  மற்றும் 1.7.2024) ஆகிய நாட்கள் நீங்கலாக 1433 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடத்த திட்டமிடப்பட்டது.

இதில் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பூலானந்தபுரம், சின்னமனூர், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம்  ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

அதுபோல  பெரியகுளம் வட்டத்தில் கெங்குவார்பட்டி பகுதி-1,  பகுதி -2, தேவதானப்பட்டி பகுதி- 1, பகுதி-2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி தலைமையிலும், தேனி வட்டத்தில் ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தேனி உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன்  தலைமையிலும், ஆண்டிபட்டி வட்டத்தில் கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பகுதி1, பகுதி-2 கிராமங்களுக்கு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன்  தலைமையிலும், போடிநாயக்கனூர் வட்டத்தில் இராசிங்காபுரம், சிலமலை போ.அம்மாபட்டி கிராமங்களுக்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயினி தலைமையிலும்  நடைபெற்றது.

இந்த ஜமாபந்தியில்  பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டாக்கள், இலவச வீட்டுமனை பட்டாக்கள், பிறப்பு-இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணத்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, நிலம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உத்தமபாளையம் தாலுகாவில் 83 மனுக்கள், பெரியகுளம் தாலுகாவில் 139 மனுக்கள், தேனி தாலுகாவில் 394 மனுக்கள், போடிநாயக்கனூர் தாலுகாவில் 217 மனுக்கள் ஆண்டிபட்டி தாலுகாவில் 375  என மொத்தம் 1208 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 

வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிட மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட  துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ்,  மாவட்ட கலெக்டர் அலுவலக அலுவலக பொது மேலாளர் ஜஸ்டின் சாந்தப்பா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பாண்டியன், உதவி ஆசிரியர்


Comments