தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பல்வேறு மாவட்ட அழைப்பு அணிகளுக்கு இடையேயான தடகள போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 29.5.2024 அன்று நடைபெற்றது.
இந்த போட்டிகள் 12 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது ஆகிய பிரிவினர்களிடையே நடத்தப்பட்டது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடந்தது.
இந்த போட்டிகளில் தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வீரர்-வீராங்கனைகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தை தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 267 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பரமக்குடி அணி 168 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது.
இதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் வக்கீல் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சேரலாதன், ஒலிம்பிக் பிசியோ நந்தா, பயிற்சியாளர் பரமேஸ், அகாடமி சட்ட ஆலோசகர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முதல் 2 இடங்களை பிடித்த அணிகளுக்கு சுழற்கோப்பையும், போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் வீரர், வீராங்கனைகள், அணியின் பயிற்சியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாண்டியன், உதவி ஆசிரியர்
Comments