தேனி என்.ஆர்.டி செவிலியர் கல்லூரியில் மனுநீதி அறக்கட்டளை சார்பில் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு
கோயம்புத்தூர் மனுநீதி அறக்கட்டளை சார்பில் தேனி-மதுரை சாலையில் க.விலக்கு அருகே உள்ள என்.ஆர்.டி செவிலியர் கல்லூரியில் 100% வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 5.4.2024 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனு நீதி அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷஜீவனா கலந்து கொண்டு அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் முதல் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவிகளுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் எடுத்துரைத்தார்.
இதனைத்தொடர்ந்து நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் தேர்தல் தொடர்பான உறுதி மொழியினை பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள், மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் எடுத்துக் கொண்டனர்.
மேலும் மாதிரி வாக்குச்சாவடி அமைத்தும், தங்கள் முகங்களில் 100 சதவீத ஓட்டுப்பதிவு என்பதை குறிப்பிட்டும் தேர்தலில் வாக்களிக்க உள்ளது குறித்து மகிழ்ச்சியுடன் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதனை அடுத்து மனுநீதி அறக்கட்டளை தலைவர் மாணிக்கம் பேசும்போது 100 சதவீதம் வாக்களிப்பு என்பது முக்கியம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் நேர்மையானவர்களை மக்களுக்கு நல்லது செய்பவர்களை மட்டுமே கண்டறிந்து வாக்களிக்க வேண்டும். மனுநீதிச் சோழன் போல் நேர்மையான ஆட்சியை உருவாக்க இளைய சமுதாயம் கல்லூரி மாணவ மாணவிகள் முன்வர வேண்டும் என்பதை மனுநீதி அறக்கட்டளையின் நோக்கம் இதற்காக 16 தீர்மானங்களை வெளியிட்டுள்ளோம் என்று கூறினார்
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் நல்லதம்பி மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments