Skip to main content

எம்.பி., பதவிக்காக அமைச்சர் பதவி ராஜினமாவா? ஆச்சரியத்தில் தேனி தொகுதி வாக்காளர்கள்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றனர். 

இதற்கிடையே, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் தமிழக பத்திர பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை அதிக வாக்கூ வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு வெற்றிவாகை சூட வேண்டும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணிதான் வெற்றிபெறும். இதில் தேனி பாராளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற செய்யாவிட்டால் தேர்தல் முடிவு மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் ராஜினமா செய்வேன் என்று ஆவேசமாக பேசினார்.


அதுபோல உண்மையாக வெற்றிக்கு உழைக்க வேண்டும். கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சோழவந்தான் தொகுதியில் நான் உழைத்ததால்தான், தற்போது அமைச்சராக உயர்ந்துள்ளேன்.

எனவே, கட்சியினர் துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று பேசினார். 

அமைச்சர் பேசிய இந்த ஆவேச பேச்சால், என்னது எம்.பி., பதவிக்காக அமைச்சர் மூர்த்தி பதவியை ராஜினாமா செய்கிறாரா என்ற ஆச்சரியத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி வாக்காளர்கள் உள்ளனர்.

பாண்டியன், உதவி ஆசிரியர் 


Comments